17 வங்கிகளில் 3000 கோடி மோசடி செய்த மோடி !!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி 11,400 கோடி கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கின்பேரில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் நீரவ் மோடிக்கு தொடர்புடைய 3 பிரபல நகைக் கடைகளிலும் அவர்கள் சோதனை நடத்தினர்.
மேலும் நாடு முழுவதும் 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் நீரவ் மோடியின் நிறுவனங்கள் 17 வங்கிகளில் கூடுதலாக 3000 கோடி கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை மேற்கொண்ட சோதனையின் போது அவரது உறவினருக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் தொழில் நிமித்தமாக எந்த ஒரு பணபரிமாற்றமும் செய்யக் கூடாது என வெளிநாடுகளில் உள்ள நீரவ் மோடியின் நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
6 மாநிலங்களில் உள்ள நீரவ் மோடியின் உறவினருக்கு சொந்தமான கீதாஞ்சலி குரூப் ஆப் கம்பெனிகளின் பல்வேறு சொத்துகள் குறித்து சிபிஐ சோதனை மேற்கொண்டது. அவை பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 4,887 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியதாக மற்றொரு வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.
நீரவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது நிறுவனங்களுக்கு சொந்தமான 29 சொத்துகள் மற்றும் 105 வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியுள்ளது. வருமான வரி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் வரும் பிப்ரவரி 27-ம் திகதி விசாரணை நடைபெறுகிறது.
நீரவ் மோடியின் கடவுச்சீட்டை முடக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் 150 ஷெல் நிறுவனங்களை விசாரணை நடத்துவதற்காக கண்டறிந்துள்ளது.
Average Rating