அரசியல்வாதிகள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல: மும்பை ஐகோர்ட் கண்டனம்!!
அரசியல்வாதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, கடவுளும் அல்ல எனக் கூறிய, மும்பை ஐகோர்ட் சதுப்புநில காட்டை அழித்து, ஆக்கிரமிப்பு செய்த சிவசேனா கட்சி பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்ய, போலீசாருக்கு உத்தரவிட்டது. மகாராஷ்டிராவில் பாஜ, சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருக்கிறார். பாஜவை சேர்ந்த பரசுராம், சிவசேனா கட்சியை சேர்ந்த அனிதா பாட்டீல் ஆகியோர் அரசுக்கு சொந்தமான சதுப்பு நில காட்டை ஆக்கிரமித்து வீடு மற்றும் அலுவலகங்கள் கட்டியிருப்பதாகவும், அரசியல்வாதி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் அஞ்சுவதாகவும் பாரத் மொகால் என்பவர் மும்பை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இது தொடர்பாக தாசில்தார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.
உள்ளூர் தாசில்தார் விசாரணை நடத்தி, சதுப்புநில பகுதியை அழித்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை உறுதி செய்து, அறிக்கை தாக்கல்செய்தார். இதையடுத்து, மும்பை ஐகோர்ட்டில் இந்த வழக்கு நீதிபதிகள், எஸ்.சி.தர்மாதிகாரி, பாரதி டாங்கிரி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அரசியல்வாதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல; கடவுளும் அல்ல. எனவே, ஆக்கிரமிப்பு செய்யும் அரசியல்வாதிகள் மீது, போலீசார் தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘குற்றஞ்சாட்டப் பட்ட, பா.ஜ மற்றும் சிவசேனாவைச் சேர்ந்த, பரசுராம் மற்றும் அனிதா பாட்டீல் மீது, ஒரு வாரத்திற்குள், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Average Rating