பத்மபூஷன் விருது பெற்றார் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்
இந்தோ-அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சுக்கு நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் நேற்று வழங்கப்பட்டது. விண்வெளியில் அதிக காலம் தங்கியிருந்து சேவை செய்த உலகின் முதல் பெண் என்ற வகையில் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான சுனிதா, நிரந்தரமாக அமெரிக்காவிலேயே செட்டிலாகி விட்டவர். கடந்த 2006-ம் ஆண்டு விண்வெளியில் உள்ள மிதக்கும் வான்வெளி ஆராய்ச்சி மையத்துக்குப் பயணம் மேற்கொண்ட அவர் 195 நாட்கள் அங்கேயே தங்கியிருந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். இந்த ஆண்டு குடியரசு தின விழாவிலேயே சுனிதா வில்லியம்சுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது அவர் நேரில் வந்து இந்த விருதைப் பெற்றுக் கொள்ளவில்லை. எனவே அமெரிக்காவில் வசிக்கும் சுனிதாவுக்கு, ஹூஸ்டனிலுள்ள இந்தியத் தூதரான எஸ்.எம்.கவாய் மூலம் இந்த விருது வழங்கப்பட்டது. விருதினைப் பெற்றுக் கொண்ட சுனிதா வில்லியம்ஸ், நான் 195 நாட்கள் வான்வெளியில் தங்கியிருந்தேன். அவை அற்புதமான தினங்கள். வானிலிருந்து பார்த்தால் பூமி மிகமிக அழகாகத் தெரியும். எல்லைகள், மொழி வேறுபாடுகள், இன உணர்வுகள் எதுவும் இல்லாத ஒரு பூமியாக இந்த கோளத்தைப் பார்த்து பூரித்துப் போனேன். ஆனால் பூமிக்கு வந்தபின் அந்த சந்தோஷம் காணாமல் போய்விடுகிறது. என்னைப் போன்றவர்கள் விண்வெளிக்குப் போனபிறகுதான் இந்த பரவச அனுபவத்தைப் பெற்றோம். ஆனால் மகாத்மா காந்தி போன்ற அரிய மகான்கள் மட்டும்தான் விண்வெளிக்குச் செல்லாமலேயே, எல்லைக்கோடுகள் இல்லாத பூமியைக் கண்டார்கள். மனிதர்கள் எப்போதும் எல்லைகளற்ற அமைதியில் திளைக்க வேண்டும் என்பது மகாத்மாவின் உயரிய நோக்கம். வாவ்… என்னவொரு பரந்த சிந்தனை. காந்தியின் தேசத்தைச் சேர்ந்த பெண் என்பதில் எனக்குப் பெருமை. பத்மபூஷன் விருது பெறுவதை பெருமையாக நினைக்கிறேன், என்றார்.
Average Rating