அணு ஆயுத சோதனையில் வடகொரியாவுக்கு உடந்தை கப்பல் நிறுவனங்கள் மீது தடை : அமெரிக்கா மீண்டும் அதிரடி!!
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கும், வர்த்தகத்துக்கும் உடந்தையாக உள்ள வெளிநாட்டு கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள், ஐநா.வின் கடும் எச்சரிக்கைகளையும் மீறி, வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையும் மீறி அணு ஆயுத சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இதனால், வருமானத்துக்கான எல்லா வழிகளையும் அடைத்த பிறகும் அந்நாட்டுக்கு எங்கிருந்து நிதி ஆதாரம் கிடைக்கிறது என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குழப்பம் அடைந்தன.
அதன் பிறகுதான், வடகொரியாவின் முக்கிய உற்பத்தி பொருட்கள் கப்பலில் எடுத்துச் செல்லப்பட்டு, சர்வதேச கடல் பகுதியில் அவை வேறு கப்பல்களுக்கு மாற்றப்பட்டு பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு தேவையான மூலப் பொருட்கள், எரிபொருட்களும் வேறு நாட்டு கப்பல்களில் கொண்டு வரப்பட்டு, சர்வதேச கடல் பகுதிகளில் அவை வடகொரிய கப்பல்களுக்கு மாற்றி எடுத்துச் செல்லப்பட்டதும் தெரிய வந்தது.
சர்வதேச கடல் பகுதிகளில் 56க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சட்ட விரோத பொருள் பரிமாற்றம் நடைபெறுவது கண்டபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வடகொரியாவுக்கு உடந்தையாக இருந்த 27 வெளிநாட்டு கப்பல் நிறுவனங்கள், 28 கப்பல்கள் மற்றும் ஒரு தனிநபர் மீது அமெரிக்கா நேற்று தடை விதித்தது. இந்த கப்பல் நிறுவனங்கள் சீனா, சிங்கப்பூர், தைவான், மார்ஷல் தீவுகள், தான்சானியா, பனாமா மற்றும் காமரோஸ் உள்ளிட்ட நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், வடகொரியாவுக்கு வருமானம் கிடைக்கும் வழிகள் அடைக்கப்பட்டுள்ளன.
‘2ம் கட்ட தடை மிகமிக கடுமையாக இருக்கும்’
இது பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிபர் டிரம்ப் நேற்று அளித்த பதிலில், ‘‘வடகொரியா மீது விதிக்கப்பட்ட முதல்கட்ட பொருளாதார தடைகளால் பயன் ஏற்படவில்லை என்றால், 2ம் கட்ட தடைகள் விதிக்கப்படும். அது, உலகளவில் இதுவரை விதிக்கப்படாத கடுமையான தடையாகவும், மிகவும் கரடுமுரடான ஒன்றாகவும் இருக்கும். உலகத்துக்கு அது மிக மிக துரதிருஷ்டவசமானதாகவும், கவலை தரக் கூடியதாகவும் அமையும். இருப்பினும், முதலில் விதிக்கப்பட்ட தடையால் நல்ல பலன் ஏற்படும் என்று நம்புகிறேன். வடகொரியா ஒரு போக்கிரி நாடு. அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உலகளவில் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. எனவே, பிரச்னையை தீர்ப்பதற்கான ஒப்பந்தம் ஏதாவது ஏற்பட்டால் மிகவும் நல்லது’’ என்றார்.
Average Rating