உயிரை காப்பாற்ற வாட்ஸ் அப்பில் பொதுமக்கள் கதறல் வீடியோ 30 நாள் போர் நிறுத்தத்தை உடனே சிரியா அமல்படுத்த வேண்டும்: ஐநா தலைவர் உத்தரவு!!
ஐநா பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டபடி 30 நாள் போர் நிறுத்தத்தை சிரியா உடனே அமல்படுத்த வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் தெரிவித்துள்ளார். சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் 2011ம் ஆண்டு முதல் ஆயுதம் தாங்கிய போரில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது அரசு படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி நடத்தி வருகின்றன. கிழக்கு கவுத்தா பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்துகின்றன. இதில் ரஷ்ய விமானங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த தாக்குதலில் சிக்கி 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனால், மருத்துவம் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்கிடையே, 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக ஆதரவு அளித்தது. இதையடுத்து, போர் நிறுத்தத்தை தாமதமின்றி உடனடியாக அமலுக்கு கொண்டு வரவேண்டும் என பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக்கொண்டது. ஆனால், போர் இன்று வரை நிறுத்தப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தங்களை காப்பாற்றும்படி பதிவுகளை வெளியிட்டு கதறி வருகிறார்கள்.
இந்த வீடியோக்களை உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் கூறுகையில், ‘‘போர் நிறுத்தத்தை சிரியா உடனே அமல்படுத்த வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எடுத்த முடிவு மதிக்கப்பட வேண்டும். 30 நாள் போர் நிறுத்தத்தை உடனே அமல்படுத்த வேண்டிய நடவடிக்கையை சிரியா மேற்கொள்ள வேண்டும். அதை செய்தால்தான் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்திற்கு மதிப்பு’’ என்று தெரிவித்தார். ஐநா மனித உரிமை கவுன்சில் தலைவர் சயித் ராத் அல் ஹசன் கூறுகையில், ‘‘ சிரியாமனித உரிமையை மீறி கொலைக்களமாக மாறி உள்ளது’’ என்றார்.
Average Rating