காபூல் இந்தியத் தூதரகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல்; 40 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலிலுள்ள இந்திய தூதரகத்துக்கு வெளியே இடம்பெற்ற ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். காலை ஜன நெரிசல் மிகுந்த நேரத்தில் இடம்பெற்ற இந்த குண்டுவெடிப்பில் இந்திய தூதரகத்தின் இராணுவ விவகாரங்களை கவனிக்கும் அதிகாரியும் மற்றுமொரு மூத்த இராஜதந்திரியும் பலியாகியுள்ளனர். 2001ஆம் ஆண்டு தாலிபான்கள் வீழ்ந்த பிறகு தலைநகர் காபூலில் இடம்பெற்ற மிகவும் மோசமான தாக்குதல் இதுதான் என்று ஆப்கானின் இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியில் செயல்படும் புலனாய்வு வலையமைப்பின் ஆதரவுடனேயே இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது என்று ஆப்கானிய அரசின் பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்தத் தாக்குதலை கண்டித்துள்ள பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, ஸ்திரமான அமைதியான ஒரு ஆப்கானிஸ்தானையே தாம் காண விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதனிடையே பாகிஸ்தானின் கராச்சி நகரின் வீதிகளில் குறைந்தது நான்கு சிறிய குண்டுகள் வெடித்துள்ளன. இந்தத் தொடர் குண்டுவெடிப்புகளில் இருபதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating