விஐபிக்களின் வாகனங்களிலும் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி!!
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயன்படுத்தும் வாகனங்களிலும் விரைவில் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மாநில ஆளுநர்கள், ராணுவத்தின் முப்படை தளபதிகள், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் உள்பட மத்திய அரசின் பல்வேறு முக்கியமான விவிஐபிக்கள் பயன்படுத்தி வரும் வாகனங்களில் சிங்க முகம் கொண்ட அரசு இலச்சினை, 1, 2 மற்றும் 3 நட்சத்திரக் குறியீடு போன்றவற்றை பார்க்க முடியும். தீவிரவாதம் அதிகரித்து வரும் இந்த காலத்தில், பதிவெண் இல்லாத வாகனங்களை தீவிரவாதிகள் எளிதில் அடையாளம் கண்டு தாக்குதல் தொடுத்தால், அதில் விஐபிக்கள் பெரிதும் பாதிக்க நேரிடும்.
அத்துடன் இந்த வாகனங்களால் விபத்து நிகழும்போது, பதிவெண் இல்லாததால், விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சகத்திற்கு வாங்கப்படும் வாகனங்கள், போக்குவரத்துத் துறையில் எப்போதும் பதிவு செய்ததில்லை எனக் கூறியுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், தன் வசம் தற்போது உள்ள 14 வாகனங்களும் நம்பர் பிளேட் இல்லாதவை எனத் தகவல் தெரிவித்தது. இதனிடையே, முக்கியஸ்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, விஐபிக்கள் வாகனங்கள் அனைத்தும், போக்குவரத்து துறையில் பதிவு செய்யப்பட்டு உரிய நம்பர் பிளேட் பொருத்தப்பட உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் டெல்லியைச் சேர்ந்த நியாயபூமி எனும் தொண்டு நிறுவனம் சார்பில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி ஹரிசங்கர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில், ‘‘விவிஐபி.க்கள் கார்களில் பதிவெண் பொருத்தும் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.
Average Rating