எஸ்எஸ்சி வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தை தொடர: ஆம் ஆத்மி மாணவர்களை தூண்டிவிடுகிறது!!
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியான சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ள போதிலும், போராட்டத்தை தொடர மாணவர்களை தூண்டி வருவதாக ஆம்ஆத்மி அரசு மீது பாஜ குற்றம் சாட்டியுள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் நடைபெற்ற மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் சிஜிஎல் தேர்வில் ஏறக்குறைய இரண்டு லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். ஆனால் இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே லீக்கானதாக தெரியவந்ததையடுத்து, தேர்வெழுதிய மாணவர்கள் டெல்லியில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் கடந்த 27ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், மாணவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதுபற்றி கருத்து தெரிவித்த மாநில பாஜ தலைவர் மனோஜ் திவாரி, “எஸ்எஸ்சி விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை ஆம் ஆத்மி அரசு தவறாக வழிநடத்தி வருகிறது. அவர்களுடைய கோரிக்கையை உணர்வுபூர்வமாக கையாண்ட மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதிலும், மாணவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட அவர்களை ஆம் ஆத்மி தூண்டி வருகிறது. இந்த விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுத்த மத்திய அரசின் செயல்பாடு ஆம் ஆத்மி அரசுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. மோதலை ஏற்படுத்தி, டெல்லியின் வளர்ச்சியை தடுக்க ஆம் ஆத்மி முயற்சி மேற்கொண்டுள்ளது” என்றார்.
Average Rating