எமது கட்சி உறுப்பினர்களை அரச பாதுகாப்புத்துறையில் இணைத்துக் கொள்ள முயற்சிப்பேன்! -கருணாஅம்மான் பேட்டி
கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளதனால் எமது கட்சி உறுப்பினர்களை தகுதி அடிப்படையில் பொலிஸ் சேவையில் அல்லது வேறு பாதுகாப்புத்துறையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் பாதுகாப்பு செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். இதன் முதலாவது கட்ட நடவடிக்கை திருகோணமலையில் ஏற்கனவே ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருணாஅம்மான் தெரிவித்துள்ளார். “லக் ஹண்ட” வானொலிக்கு அவர் வழங்கிய செவ்வியின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கருணா அம்மான் தனது பேட்டியில் மேலும் கூறியுள்ளதாவது “அரசாங்கப் படையுடன் நேருக்கு நேர் யுத்தம் புரியும் பலத்தை புலிகள் இழந்துவிட்டனர். அரச படைகளிடம் புலிகள் தோல்வியடையும் நாள் வெகு தொலைவில் இல்லை. புலிகள் வெளிநாடுகளில் பலவந்தமாக சேகரித்த நிதியின் மூலம் ஆயுதங்களை வாங்கி யுத்தம் புரிந்தனர். ஆனால் இன்று அந்த வழிகள் அடைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் தீவிர தாக்குதல்களினால் புலிகள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளனர். படையினர் அண்மையில் புலிகளின் மிகவும் முக்கியமான தளங்களைக் கைப்பற்றியுள்ளனர். தொடர்ச்சியாக புலிகள் தமது உறுப்பினர்களையும் இழந்து வருகின்றனர். கிழக்கில் எல்.ரீ.ரீ.ஈ. யினரிடமிருந்து எனது குழுவினர் பிரிந்து சென்றதன் காரணமாகவே புலிகள் தமது பலத்தை இழந்துவிட்டனர் என நான் நினைக்கிறேன். புலிகளினால் எமக்கு அச்சுறுத்தல் இருந்த காரணத்தினால்தான் எமது குழுவினர் ஆயுதமேந்தவேண்டிய நிலை ஏற்பட்டது. என் மீது நம்பிக்கை கொண்ட கிழக்கு மக்கள் எமது கட்சிக்கு ஆதரவளித்து மாகாண முதலமைச்சராக எமது கட்சி உறுப்பினரை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். எமது பிரதேச மக்களின் இந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ஜனநாயக அரசியலில் தொடர்ந்தும் நிலைத்து நிற்கவே நான் விரும்புகிறேன்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Average Rating