ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் கலவரத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் இந்தியர்கள் கைது
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் மோசமான உணவு வழங்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்து வாகனங்களுக்கு தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்டனர். இப்படி கலவரத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் பேரை அந்த நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்து உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள ராஸ் அல் கயாமக் என்ற இடத்தில் உள்ள ஒரு செராமிக் தொழிற்சாலையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களைசேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த தொழிற்சாலையே அவர்களுக்கு உணவும், தங்குமிடமும் கொடுத்து உள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு தரக்குறைவாக இருந்ததால் அவர்கள் கோபம் கொண்டனர். அவர்கள் தொழிற்சாலையின் பிரதிநிதியிடம் தகராறு செய்தனர். அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால் அவருடன் ஏற்பட்ட தகராறு முற்றியது. பிரதிநிதியின் செயல்பாடு அவர்களின் கோபத்தை ஆத்திரமாக மாற்றியது. அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். வாகனங்களுக்கு தீ வைத்தனர். தொழிலாளர்கள் தங்கும் இடத்தில் உள்ள மேஜை நாற்காலிகளை உடைத்தனர். கம்பெனி பிரதிநிதியை கலவரக்காரர்கள் அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தொழிலாளர்கள் முகாமில் தங்கி இருந்த 3 ஆயிரம் பேரையும் கைது செய்தனர். அவர்களை அங்கு இருந்து அபுதாபிக்கு அழைத்துச் செல்வதற்காக ராணுவம் வரவழைக்கப்பட்டது. தனி வாகனங்களில் அவர்களை அபுதாபிக்கு ராணுவம் அழைத்துச்சென்றது. தொழிலாளர்களின் தகராறுக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டது, இதுதான் முதல் முறை ஆகும். விசாரணைக்காகவும், கைரேகையை பதிவு செய்வதற்காகவும் அவர்கள் அபுதாபிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும், அதன் பிறகு அவர்கள் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
Average Rating