மே மாதம் சந்திக்க வாய்ப்பு வடகொரியா அதிபருடன் பேச டிரம்ப் சம்மதம்!!
வடகொரியா அதிபர் கிம் ஜங் யுன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சம்மதித்துள்ளார். தென்கொரியாவில் சமீபத்தில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா கலந்து கொண்டதை தொடர்ந்து, வடகொரியா – தென்கொரியா இடையே பதற்றம் தணிந்துள்ளது. மேலும், சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்த அதிபர் உன், தென்கொரியா அதிபர் மூனை தன் நாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ஆனால், அவர் செல்லவில்லை. அதற்கு பதிலாக, தென்கொரியா அமைதி குழுவினர் கடந்த வாரம் வடகொரியா சென்று அதிபர் உன்ைன சந்தித்து பேசினார்கள். இதை அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்றார். பின்னர், வடகொரியா அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரத்தை தென்கொரியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூங் இல் யோங் அமெரிக்கா சென்று அதிபர் டிரம்ப்பிடம் விவரித்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு யோங் அளித்த பேட்டியில், “வடகொரிய தலைவர் கிம் ஜங் உன் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்துவது தவிர்க்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கவும் விருப்பம் தெரிவித்தார். இது பற்றி டிரம்பிடம் தெரிவித்தேன். வடகொரிய தலைவரின் கோரிக்கைக்கு டிரம்ப் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இருநாட்டு தலைவர்களும் விரைவில் சந்திக்க உள்ளனர்” என்றார். இந்நிலையில், உன் – டிரம்ப் சந்திப்பு வரும் மே மாதம் நடக்கும் என அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், “தென்கொரிய பிரதிநிதிகள் வடகொரிய தலைவருடன் நடத்திய சந்திப்பை டிரம்ப் பாராட்டியுள்ளார். பேச்சுவார்த்தைக்கு உன் விடுத்துள்ள அழைப்பை டிரம்ப் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த சந்திப்புக்கான இடம், நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை’’ என்றார்.
Average Rating