முஸ்லிம்களுக்கு எதிராக போப் பேச்சு: பாலஸ்தீனத்தில் 2 தேவாலயம் மீது குண்டு வீச்சு
போப் ஆண்டவர் பெனடிக் ஜெர்மனி சுற்றுப்பயணத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக பல்வேறு நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. யாரையும் புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறிய போப் ஆண்டவர் தான் வெளியிட்ட கருத்துக்களுக்கு வருத்தமும் தெரிவித்தார். ஆனாலும் பல்வேறு நாடுகளில் அவருக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
பாலத்தீன எல்லையின் மேற்கு கரை பகுதியில் உள்ள `நவுலஸ்’ நகரில் 2 கிறிஸ்தவ ஆலயங்கள் மீது குண்டு வீசப்பட்டன. அங்குள்ள ஆங்கிலக்கன் சர்ச் மீது காரில் வந்த 4 முகமூடி மனிதர்கள் சரமாரியாக குண்டுகளை வீசினார்கள். இதில் அந்த ஆலயத்தின் சுவர் இடிந்து விழுந்தது.
நவுலஸ் நகரில் உள்ள இன்னொரு தேவாலயத்தின் மீதும் இதேபோல குண்டு வீசப்பட்டது. அந்த தேவாலயத்துக்கு அவர்கள் தீ வைத்தனர். காசா பகுதியிலும் இதேபோல 2 நாட்களுக்கு முன் ஒரு சர்ச் மீது குண்டு வீசப்பட்டது.
போப் ஆண்டவர் இன்று ரோம் நகரில் நடக்கும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். முஸ்லிம்கள் சர்ச்சைக்குப்பிறகு வாடிகனுக்கு வெளியே நடக்கும் நிகழ்ச்சியில் போப் கலந்து கொள்வது இதுவே முதல் தடவை. எனவே அவருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.