பாக்.கில் இந்திய அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டது எப்படி? : காலிங்பெல்லை நள்ளிரவில் அடித்து தொல்லை!!
பாகிஸ்தானில் தங்கள் வீடுகளின் அழைப்பு மணியை நள்ளிரவில் ஒலிக்க செய்து அடிக்கடி துன்புறுத்தியதாக முன்னாள் தூதரக அதிகாரி விஷ்ணு பிரகாஷ் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியா, பாகிஸ்தான் இடையே அடிக்கடி காஷ்மீர் பிரச்னை தொடர்பாக மோதல் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் பலமுறை அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பிறகும் முடிவு ஏற்படவில்லை. இதற்கு தீர்வு காண பிரதமர் மோடி இருநாடுகள் இடையே நல்லுறவை ஏற்படுத்த முயன்றார். அவரது முயற்சியும் வீணானது. மேலும், தங்கள் நாட்டு தூதர்கள் துன்புறுத்தப்படுவதாக இந்திய, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகங்கள் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் உள்ள தனது நாட்டு தூதரக அதிகாரிகள் துன்புறுத்தப்படுவதாக பாகிஸ்தான் சமீபத்தில் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக கடந்த 13ம் தேதி இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணைத் தூதரை பாகிஸ்தான் அரசு நேரில் அழைத்து கண்டித்தது.
ஆனால், பாகிஸ்தான் அரசும் தங்களை பல நேரங்களில் துன்புறுத்தியதாக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அரசியல் ஆலோசகராக பணியாற்றிய விஷ்ணு பிரகாஷ் குற்றம்சாட்டி உள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘எங்கள் வீட்டின் அழைப்பு மணியை (காலிங்பெல்) மர்ம நபர்கள் நள்ளிரவில் ஒலிக்க செய்து விட்டு தப்பி விடுவார்கள். இதுபோல் பலமுறை மணியை ஒலிக்க செய்து என்ைன துன்புறுத்தி உள்ளனர். நான் மருத்துவமனைக்கு செல்லும்போது கூட பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ அதிகாரிகள் என்னுடன் வருவார்கள். மருத்துவமனைக்குள் சென்றதும் என்னை கண்காணிப்பார்கள். மின்வசதி துண்டிப்பு, ஆபாச போன் அழைப்புகள், குடிநீர் இணைப்பு துண்டிப்பு, எனது காரை விரட்டி வருவது, குழந்தைகள் மிரட்டப்படுதல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன’’ என்றார்.
Average Rating