‘காலா’ ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு(சினிமா செய்தி)?
டிஜிட்டல் முறையில் தியேட்டர்களில் புதிய படங்களை திரையிடுவதற்காக கியூப் நிறுவனம் அதிக கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மார்ச் 1ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் நிறுத்தப்பட்டதுடன், சென்ற 16ம் தேதியிலிருந்து ஷூட்டிங்குகளும் ரத்து செய்யப்பட்டன. சுமூக முடிவு ஏற்படும்வரை வேலை நிறுத்தம் தொடரும் என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்தார். இதையடுத்து படப்பிடிப்பு, டப்பிங், ரீ ரிக்கார்டிங் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கின.
இதற்கிடையில் 8 சதவீத கேளிக்கை வரி குறைக்க வேண்டும், டிக்கெட் கட்டணம் உயர்த்த வேண்டும் என்று அரசை வற்புறுத்தி தியேட்டர் அதிபர்களும் 16ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் 30க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் கடந்த சில வாரமாக முடங்கிக்கிடக்கிறது. ஏற்கனவே ரஜினி நடித்திருக்கும் ‘காலா’ படம் முடிவடைந்து திரைக்கு வர தயாராக உள்ளது. வரும் ஏப்ரல் 27ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று பட தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருக்கிறார். திரையுலக வேலை நிறுத்தத்தால். ‘காலா’ ரிலீஸ் மேலும் தள்ளிப்போகும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. ஆனால் இதை தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது. ரிலீஸ் தேதியில் மாற்றம் எதுவும் இல்லை என்றும் கூறியிருக்கிறது.
முன்னதாக திரையுலக வேலை நிறுத்தம்பற்றி ரஜினி கூறும்போது,’எதற்கும் வேலை நிறுத்தம் தீர்வாகாது என குறிப்பிட்டிருந்தார். இதுபற்றி விஷால் கூறும்போது வேலை நிறுத்தம்பற்றி ரஜினியை நேரில் சந்தித்து விளக்கம் கூறி ஆதரவு கேட்பேன் என்றார். கமல்ஹாசன் நடித்திருக்கும் விஸ்வரூபம் 2ம் பாகமும் திரைக்கு வர தயாராக உள்ளதால் ஏற்கனவே கமல், விஷாலை அழைத்து வேலை நிறுத்தம்பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்றுமுன்தினம் திரை அரங்கு உரிமையாளர்கள் நேரில் சந்தித்தனர். நேற்று அதிகாரிகள், அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து திரைஅரங்கு வேலை நிறுத்தத்தை இன்று முதல் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். அதன்படி இன்றுமுதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் இயங்கும்.
Average Rating