நடிகை கடத்தல் வழக்கு – டிரைவர் அதிர்ச்சி தகவல்!! (சினிமா செய்தி)
கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப், ரவுடி பல்சர்சுனில், பாதிக்கப்பட்ட நடிகையின் கார் டிரைவர் மார்ட்டின் ஆன்டனி உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது நடிகர் திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் மார்ட்டின் ஆன்டனி 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.
இதற்கிடையில் தனக்கு ஜாமீன் கேட்டு டிரைவர் மார்ட்டின் எர்ணாகுளம் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. இதைத் தொடர்ந்து மார்ட்டினை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 11-ந்தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
விசாரணை முடிந்து மீண்டும் ஜெயிலில் அடைப்பதற்காக மார்ட்டினை போலீசார் கோர்ட்டில் இருந்து அழைத்து சென்ற போது நிருபர்களிடம் மார்ட்டின் சில பரபரப்பு தகவல்களை தெரிவித்தார்.
நடிகை கடத்தல் வழக்கில் நான் எந்த தவறும் செய்யவில்லை. நிரபராதியான என்னை கைது செய்து வழக்கு போட்டு உள்ளனர். அதே போல் நடிகர் திலீப்பையும் சதி செய்து இந்த வழக்கில் சிக்க வைத்து உள்ளனர். நடிகைகள் மஞ்சுவாரியர், ரம்யா நம்பீசன், டைரக்டர்கள் லால், ஸ்ரீகுமார் மேனன் ஆகியோர் இந்த சதி திட்டத்தின் பின்னணியில் உள்ளனர்.
திலீப்பை இந்த வழக்கில் சிக்க வைக்க உதவியதற்காக மஞ்சுவாரியருக்கு மும்பையில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு பரிசாக வழங்கப்பட்டு உள்ளது.
மலையாள பட உலகில் முன்னணி நடிகராக உள்ள மோகன்லால் நடித்து வரும் ஒடியன் என்ற படத்திலும் மஞ்சுவாரியருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இது போல வெகுமதிகள் கிடைத்துள்ளது.
இது போல மேலும் பல முக்கிய தகவல்கள் என்னிடம் உள்ளது. கோர்ட்டிலும் அனைத்து உண்மைகளையும் கூறி உள்ளேன். கோர்ட்டு மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளதால் நிச்சயம் எனக்குநீதி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் உள்ளனவா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு சந்தர்ப்பம் அமையும் போது ஆதாரங்களை வெளியிடுவேன் என்று அவர் தெரிவித்தார். மார்ட்டினின் குற்றச்சாட்டுகள் மூலம் இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Average Rating