இயக்குனர் சி.வி காலமானார் !!(சினிமா செய்தி)
பிரபல இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் பிரபல இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
முத்துராமன், ராஜஸ்ரீ, ரி.எஸ்.பாலையா நடித்த “அனுபவம் புதுமை” என்ற படம்தான் இவரது முதல் படம். இப்படம் 1967-இல் வெளிவந்தது. ஸ்ரீதரிடம் இருந்தபோது “மீண்ட சொர்க்கம்”, “கலைக்கோவில்”, “கொடி மலர்”, “நெஞ்சம் மறப்பதில்லை”, “நெஞ்சிருக்கும் வரை” போன்ற படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார். ”காதலிக்க நேரமில்லை” படத்தின் போது அசோஸியேட் இயக்குனரானார். “அனுபவம் புதுமை” படத்தில் தான் முதன்முதலாக ஸ்லோமோஷன் காட்சிகளை அமைத்தவர் இவர். ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான கதையை ஜெய்சங்கர், பாரதி, நாகேஷ், ஜெயந்தி, விஜயலலிதா நடிக்க வைத்து இவர் இயக்கிய “நில் கவனி காதலி” என்ற படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
இவரது இயக்கத்தில் வெளிவந்த “சங்கிலி” என்ற திரைப்படத்தில் தான் இளைய திலகம் பிரபுவை அறிமுகம் செய்தார். 1993-லிருந்து 4 வருடங்கள் நடிப்பதிலிருந்து விலகியிருந்த சிவாஜி கணேசனை தனது சொந்தப் படமான “ஒன்ஸ்மோர்” படத்தில் நடிக்க வைத்தார். இப்படத்தில் விஜய், சரோஜாதேவி, மணிவண்ணன், சிம்ரன் ஆகியோரும் நடித்திருந்தனர். இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
இவர் தொலைக்காட்சிகளில் பல தொடர்களையும் இயக்கியிருக்கின்றார். முதன் முதலாக நா.பார்த்தசாரதியின் “குறிஞ்சி மலர்”’ தொடரை இயக்கினார். இத்தொடரில் கதாநாயகனாக நடித்தவர் மு.க.ஸ்டாலின். இவர் இயக்கிய “கோகிலா எங்கே போகிறாள்” இன்ற தொடருக்கு சிறந்த இயக்குநர் விருது இவருக்குக் கிடைத்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது “கலைமாமணி’’ விருது கொடுத்து கௌரவித்தார்.
இயக்குனர் சி.வி.ராஜேந்திரனுக்கு ஜானகி என்ற மனைவியும், ஒரு பெண், ஒரு ஆண் என்ற இரு வாரிசுகளும் உள்ளனர்.
Average Rating