தண்ணீர் குடிப்பதை தவிர்த்தால் ஆபத்து…! (மருத்துவம்)
மனித உடல் 70 முதல் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. உடலுக்கு உணவைவிட தண்ணீர் அவசியம். ஆனால், இந்த நீர்ச்சத்து உடலில் ஏற்படும் சில மாற்றங்களால் சமநிலையை இழக்கிறது. அதுதான் ‘’டீஹைட்ரேஷன்’’ எனப்படும் உடல் வறட்சி. தற்போதைய நம் வாழ்க்கை முறையில் பெரும்பாலானோர் உடல் வறட்சியால் பாதிக்கப்படுகிறார்கள். தாகம் எடுப்பது, நாக்கு வறண்டுபோவது, உடல் சோர்வு, தசைப்பிடிப்பு, அதிகளவு சிறுநீர் கழிப்பது, தலை சுற்றுவது, தலைவலி ஏற்படுவது, வியர்ப்பது, குழப்பான மனநிலை போன்றவை உடல்வறட்சி ஏற்பட்டுள்ளதற்கான மிக முக்கியமான அறிகுறிகள்.
உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் நீர்ச்சத்து குறைவதற்கான முக்கியமான காரணங்களாகும். உடலில் ஏற்படும் சில நோய்களும் நீர்ச்சத்து குறைவதற்கான காரணியாக இருக்கும். வயிற்றுப்போக்கு, வாந்தி, தீக்காயங்கள், உடல் சூடு, காய்ச்சல், அதிக வியர்வை, சர்க்கரை நோய் பாதிப்பு, போதிய அளவு நீர் அருந்தாமை போன்றவைதான் இதற்கான காரணங்களாக இருக்கும்.
கவனிக்காமல் விட்டால், நீர்ச்சத்து குறைபாடு முதிர்ச்சி நிலையை அடையும். இது, சிறுநீரக செயலிழப்பு, உணர்விழந்த முழு மயக்க நிலை, அதிர்ச்சி நிலை, அதீத காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
தாகம் எடுக்காத நிலையிலும் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க கூடாது. குறிப்பிட்ட நேரத்தில் தேநீர் அருந்துவதைப்போல தண்ணீர் குடிப்பதையும் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு நீர்ச்சத்து குறைந்தவர்கள், முதல் நிலையிலேயே உணவுமுறையில் மாற்றத்தை பின்பற்றினால், பிரச்னையை சரிசெய்யலாம். உடலில் நீர்ச்சத்து அளவு குறைவதாக உணர்கிறவர்கள், சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரை அருந்த வேண்டும். எலக்ட்ரால் அல்லது ஜூஸ் வகைகளையும் அருந்தலாம். உடல் வறட்சி என்பது இயல்பாக ஏற்படும் பாதிப்புகளில் ஒன்றுதான் என்றாலும்கூட, கவனிக்கப்படாத பட்சத்தில், அது பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முன்னெச்சரிக்கையோடு செயல்படுதல் நல்லது.
Average Rating