மலேசியாவில் முன்னாள் துணைப்பிரதமர் அன்வர் மீண்டும் கைது
மலேசியாவில் முன்னாள் துணைப்பிரதமர் அன்வர் இப்ராகிம் மீது கூறப்பட்ட செக்ஸ் குற்றச்சாட்டை தொடர்ந்து நேற்று அவர் கைது செய்யப்பட்டார். மலேசியாவில் மகாதிர் ஆட்சிக்காலத்தில் துணைப்பிரதமராக இருந்தவர் அன்வர் இப்ராகிம். பொருளாதார நிபுணரான இவர் மகாதிரின் நம்பிக்கையை இழந்ததும், இவர் மீது செக்ஸ் குற்றச்சாட்டும் ஊழல் குற்றச்சாட்டும் கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளின் மீது அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. கீழ்க்கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்கோர்ட்டில் அப்பீல் செய்தார். அதன்பேரில் அவர் நிரபராதி என்று தீர்ப்பு கூறப்பட்டு விடுதலையானார். பிறகு அவர் கெடிலான் ரக்யத் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அவர் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்றும் பாராளுமன்றத்துக்குள் நுழைந்ததும் அவர் எதிர்க்கட்சி தலைவர் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இப்போதைய ஆட்சியை அகற்றி விட்டு, புதிய ஆட்சி அமைக்க பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தனக்கு போதுமான ஆதரவு இருக்கிறது என்று அவர் கூறிவந்தார். இந்த நிலையில் அவர் மீது மீண்டும் செக்ஸ் புகார் கூறப்பட்டது. அவரிடம் உதவியாளராக வேலை பார்த்த மொகமது சைபுல் புகாரி அஸ்லாம் தன்னிடம் அன்வர் செக்ஸ் உறவு கொண்டார் என்று புகார் கூறினார். இந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது மனைவியும், பாராளுமன்றத்தில் இப்போதைய எதிர்கட்சி தலைவருமான டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயில் நிருபர்களிடம் கூறுகையில், `என் கணவரை போலீசார் கைது செய்து இருப்பதாக இப்போது தான் எனக்கு தகவல் வந்தது’ என்று தெரிவித்தார். தன் உதவியாளர் கூறிய புகாரை எதிர்த்து அன்வர் சியாரியா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
Average Rating