ஒரிசாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: அதிரடிப் படை போலீசார் 21 பேர் பலி; கண்ணிவெடியில் சிக்கியவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்
ஒரிசாவில் விசேஷ அதிரடிப் படை போலீசார் சென்ற வேனை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கண்ணிவெடி வைத்து தகர்த்தனர். பின்பு, போலீசார் உயிர் தப்ப முயன்றபோது அவர்களை சரமாரியாக சுட்டுக் கொன்றனர். ஒரிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. 2 வாரங்களுக்கு முன்புதான் இப்பகுதியில் பதுங்கியிருக்கும் மாவோயிஸ்டு தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக படகில் வந்த ஆந்திர கமாண்டோ போலீஸ் படைப் பிரிவினரை மாவோயிஸ்டுகள் பயங்கரமாக தாக்கினார்கள். இதில் அந்தப் படகு மூழ்கி 35 கமாண்டோ போலீசார் பலியாகிவிட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மாவோயிஸ்டுகள் நேற்று இன்னொரு பயங்கர தாக்குதலை போலீசார் மீது நடத்தினார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- நேற்று முன்தினம் இரவு மல்காங்கிரி பகுதியில் உள்ளூர் பாரதீய ஜனதா தலைவர் ஒருவரின் வீட்டை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கடுமையாகத் தாக்கி சேதப்படுத்தினார்கள். இந்தத் தகவலை அறிந்த, விசேஷ அதிரடி போலீஸ் படையினர் தீவிரவாதிகளை சுற்றிவளைப்பதற்காக உடனடியாக ஒரு வேனில் நேற்று புறப்பட்டனர். மல்காங்கிரியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்கு அவர்கள் கண்ணி வெடியால் தகர்க்க முடியாத ஒரு வேனில் பயணமானார்கள். அந்த வேன் காட்டுப் பகுதியில் கலிமேளா-மோட்டு ரோடு வழியாக சென்றபோது பாதையின் குறுக்கே மரங்கள் வெட்டிப்போடப்பட்டிருந்தன. அதை அப்புறப்படுத்துவதற்காக போலீசார் வேனை நிறுத்தினர். அப்போது, மாவோயிஸ்டுகள் சாலையில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் அந்தவேன் சிக்கியது. கண்ணிவெடி வெடித்த வேகத்தில் வேன் தலைப் குப்புற கவிழ்ந்தது. இதனால் விசேஷ அதிரடிப் படை போலீசார் வேனில் இருந்து ஒவ்வொருவராக வெளியே வர முயன்றனர்.
சரமாரியாக சுட்டுக் கொலை
அதே நேரத்தில் மரங்களில் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், அதிரடிப்ë படை போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே வேனில் இருந்த 21 போலீசாரும் பலியாகி விட்டனர். அதன் பின்னர் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
ஒரிசா மாநில தலைமை போலீஸ் அதிகாரி கோபால் சந்திர நந்தா, வேனில் சென்ற விசேஷ அதிரடிப்படை போலீசார் அனைவரும் பலியான தகவலை உறுதி செய்தார்.
மாவோயிஸ்டுகளின் இந்த கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதிக்கு இன்னொரு வேனில் அதிரடிப் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், காட்டுக்குள் தப்பியோடிய மாவோயிஸ்டுகளையும் அதிரடிப் படை போலீசார் சல்லடை போட்டு தேடி வருகிறார்கள்.
Average Rating