ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் தமிழர்கள் போராட்டம்!!
ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைப்பெறும் போராட்டத்திற்கும் வெளிநாட்டு தமிழர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அமெரிக்காவிலும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது.
இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு திரண்ட ஏராளமான தமிழர்கள் கையில் பதாகைகளை ஏந்தியபடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஸ்டெர்லைட் ஆலை மூலமாக தமிழகத்தை முற்றாக அழிப்பதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் முயன்று வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லஸ் நகரில் ஏராளமான தமிழர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யக் கூடாது, ஏற்கனவே இயங்கும் ஆலையில் இருந்து நச்சு கழிவுகள் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதேபோல் ஹூஸ்டன் நகரிலும் தமிழர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலை மேலும் இயங்க அரசு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்திலும் சட்டப்பேரவை முன்பாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஆலையை மூட வேண்டும் என்று போராட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர். சார்லோட், நியூயார்க், பாஸ்டன், அட்லாண்டா, சிகாகோ உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அனைத்திலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
Average Rating