ஓரினச் சேர்க்கை செக்ஸ் புகார்: மலேசிய முன்னாள் துணைப் பிரதமருக்கு ஜாமீன்
ஓரினச் சேர்க்கை புகார் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மலேசிய முன்னாள் துணைப் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான அன்வர் இப்ராஹிம் (60) வியாழக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த ஜூன் 26-ல் தன்னை பாலியல் உறவுக்கு அன்வர் இப்ராஹிம் அழைத்ததாக அவரது உதவியாளர் முகமது சைபுல் புகாரி அஸ்லான் (23) போலீஸில் ஜூன் 28-ல் புகார் தெரிவித்தார். முகமது சைபுல் புகாரி அஸ்லானுக்கு எதிராக அன்வர் இப்ராஹிம் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், அஸ்லான் புகார் தொடர்பாக அன்வரை போலீஸôர் அவரது வீட்டருகே புதன்கிழமை இரவு கைது செய்தனர். பல மணி நேரம் விசாரணைக்குப் பின் வியாழக்கிழமை காலை அன்வர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 10 ஆண்டுகளுக்கு முன் இதே போன்றதொரு புகாரில் சிக்கிய அன்வர் இப்ராஹிம், 6 ஆண்டு சிறைத் தண்டனைக்குப் பின், 2004-ல் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அப்போது துணைப் பிரதமர் பதவியிலிருந்து அப்போதைய பிரதமர் மகாதீர் முகமதுவால் அன்வர் இப்ராஹிம் நீக்கப்பட்டார். கடந்த மார்ச் 8-ல் நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 222 இடங்களில் அன்வர் தலைமையிலான மக்கள் கூட்டணி 82 இடங்களை வென்று வரலாறு படைத்தது. இது பெரும்பான்மைக்கு 30 இடங்களே குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பருக்குள் பெரும்பான்மை பெற்றுவிடுவோம் எனக் கூறிவந்த அன்வருக்கு, தற்போதைய ஓரினச் சேர்க்கை புகார் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating