ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக வந்த காளை : பாதுகாவலர்கள் விரட்டியபோதும் அசரவில்லை!!(உலக செய்தி)
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக வந்த காளை மாட்டை பார்த்து பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர். தேவஸ்தான பாதுகாவலர்கள் அந்த காளையை விரட்டியபோதும் அது அசராமல் மலைக்கு நடந்து சென்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பல்லவர்கள், சோழர்கள், கிருஷ்ண தேவராயர், ஆங்கிலேயர்கள் வரை பல மாமன்னர்கள் பாத யாத்திரையாக வந்து சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். இவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றியதற்கு விலைமதிப்புமிக்க வைர, வைடூரியம் அடங்கிய ஆபரணங்களை காணிக்கையாக வழங்கி உள்ளனர்.
அதுமட்டுமின்றி சாதாரண நாட்களில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பக்தர்களும், வார விடுமுறை மற்றும் முக்கிய உற்சவ நாட்களில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்கள் வரை மலைப்பாதையில் பாத யாத்திரையாக வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் அலிபிரி மலைப்பாதையில் பக்தர்களுடன் ஒரு காளை மாடு நடக்க தொடங்கியது. அது நடந்து சென்ற பக்தர்களுக்கு எந்த இடையூறும் செய்யவில்லை. எனினும் அங்கிருந்த பக்தர்களும், தேவஸ்தான பாதுகாவலர்களும் அந்த காளையை விரட்டினர். இருப்பினும் அசராமல் அந்த காளை தொடர்ந்து திருமலைக்கு படிக்கட்டுகள் வழியாக பாத யாத்திரையாக நடந்து வந்தது.
எத்தனை பேர் விரட்டியும் விலகாமல் மாலை 5 மணியளவில் காளிகோபுரம் எனப்படும் மலை உச்சியை அடைந்தது. இதனால் பக்தர்கள் ஆச்சரியமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருமலை, திருப்பதி தேவஸ்தான வனத்துறை ஊழியர்கள் இந்த மாட்டிற்கு பூஜை செய்து கயிறு கட்டி திருமலையில் உள்ள மடத்திற்கு அழைத்து சென்று சேர்த்தனர். இச்சம்பவம் பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating