ஹபீஸ் சயீத்தின் இயக்கம் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு நிரந்தர தடை விதிக்க பாகிஸ்தான் திட்டம்!!(உலக செய்தி)
பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா உள்ளிட்ட சில இயக்கங்கள் மீது நிரந்தர தடை விதிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2008, நவம்பர் 26ம் தேதி மும்பையின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார்.
இவரை வீட்டுச் சிறையில் வைத்திருந்த பாகிஸ்தான் அரசு, பின்னர் விடுவித்தது.
இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. அவரை விடுவிக்கக் கூடாது என்று நெருக்கடி கொடுத்த அமெரிக்கா, அவரின் தலைக்கு ₹55 கோடி பரிசு அறிவித்தது. இதேபோல். ஐநா. பாதுகாப்பு கவுன்சிலும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் சில தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதித்தது.
தீவிரவாதிகளை அழிக்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்று ஐநா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
மேலும், தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி வருவதாக குற்றம்சாட்டி பாகிஸ்தானுக்கு அளித்து வந்த பல ஆயிரம் கோடி நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியது.இதனிடையே, கடந்த வாரத்தில் ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா, லஷ்கர் இ தய்பா உள்ளிட்ட 27 அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தது.
இந்நிலையில், கடந்த 1997ம் ஆண்டு பாகிஸ்தானில் கொண்டு வரப்பட்ட தீவிரவாத தடுப்பு சட்டத்தை திருத்தி, ஜமாத் உத் தவா உள்ளிட்ட இயக்கங்களை தீவிரவாத அமைப்பு பட்டியலில் சேர்க்க அந்நாட்டு அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான வரைவு சட்டம் தயாரிக்கப்பட்டு, இன்று துவங்கும் நாடாளுமன்ற தேசிய சபையில் அது தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிகிறது. மேலும், தீவிரவாத இயக்கங்களுக்கு எந்தெந்த வழிகளில் நிதி வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் குழுவையும் நியமித்துள்ளது.
Average Rating