நேற்று முன்தினம் இலங்கை பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 82 விடுதலைப்புலிகள் பலி
இலங்கையின் வடபகுதியில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் புலிகளின் கடற்படை தளத்தில் இறந்த 51 பேரையும் சேர்த்து மொத்தம் 82 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடபகுதியை புலிகளிடம்இருந்து முழுவதுமாக மீட்பதற்கு அந்நாட்டு ராணுவம் அவர்களுக்கு எதிராக கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. நேற்று முன்தினம் வடமேற்கு கடலோரத்தில் மன்னார் நகரத்திற்கு அருகேயுள்ள புலிகளின் கடற்படை பிரிவான கடற்புலிகளின் முக்கிய தளமாக விளங்கிய விடத்தல்தீவு அவர்களிடமிருந்து மீட்கப் பட்டது. இலங்கை பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் புலிகளின் இந்த கேந்திர முக்கியத் துவம் வாய்ந்த கடற்படை தளம் அவர்களிடமிருந்து கைப்பற்றப் பட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்த புலிகளின் எண்ணிக்கை 51ஐ எட்டியுள்ளது என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் ராணுவ தரப்பில் வீரர் ஒருவர் பலியானதாகவும், 15 பேர் படுகாயம் அடைந்ததாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. இதனிடையே, கைப்பற்றப்பட்ட விடத்தல்தீவுக்கு வடக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் இலுப்பைகடவை என்ற இடத்தில் நேற்று மதியம் விடுதலைப்புலிகளின் மற்றொரு முக்கிய தளத்தின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் குண்டு வீசி அதிரடி தாக்குதல்களை மேற்கொண்டதாக இலங்கை விமானப்படையின் செய்தி தொடர்பாளர் ஜனக நாணயக்காரா தெரிவித்தார். இந்த தாக்குதலில் புலிகள் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை என்று அவர் கூறினார். இதேபோல யாழ்பாணத்தின் கிலாலி என்ற இடத்திலும், புலிகளுக்கு எதிராக ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு விடுதலைப்புலி பலியானதாக ராணுவம் தெரிவித்தது. மேலும், வவுனியாவில் அம்படன்குளம் என்ற இடத்தில் 3 விடுதலைப்புலிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் ராணுவ தரப்பில் ஒரு வீரர் தனது உயிரை இழந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். அத்துடன் வவுனியாவில் உள்ள நவ்வி என்ற இடத்திலும் புலிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் விடத்தல் தீவு தாக்குதலில் உயிரிழந்த 51 பேரையும் சேர்த்து வடபகுதியில் ராணுவம் நடத்திய வெவ்வேறு தாக்குதல்களில் மொத்தம் 82 விடுதலைப்புலிகள் கொல்லப் பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Average Rating