மாந்திரீகம் மூலம் சிகிச்சை அளிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை மந்திரவாதி குற்றவாளி என தீர்ப்பு!!
மாந்திரீகம் மூலம் முதுகு வலியை குணப்படுத்துவதாக கூறி, சிகிச்சைக்கு வந்த சிறுமியிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. டெல்லியை சேர்ந்த பெண், தனது 12 வயது மகளின் முதுகு வலியை சரிசெய்ய வடமேற்கு டெல்லியில் உள்ள மாந்திரீகர் ஒருவரிடம் கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி அழைத்து சென்றுள்ளார். அப்போது மாந்திரீகர் சங்கர், சிறுமியின் தாயிடம் சிகிச்சைக்கு தேவையான எலுமிச்சை பழங்களை வாங்கி வரும்படி கூறி அனுப்பியுள்ளார். அதன் பின் சிறுமியை அறைக்குள் வைத்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி ஓடி சென்று நடந்தவற்றை தனது தாயிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சாலிமார் பாக் காவல் நிலையத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணையில் இருந்து வரும் நிலையில் நேற்று மீண்டும் கூடுதல் செசன்ஸ் நீதிபதி அமித் குமார் முன் வந்தது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியை மறுத்த சங்கர், சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்ததால், அவளது தாய் தன் மீது பொய் குற்றச்சாட்டு கூறுவதாக தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி பின் வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது: மாந்திரீகர் சங்கர், சிறுமியின் தாயை எலுமிச்சை வாங்கி வர அனுப்பி விட்டு, சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது சிறுமியின் சாட்சியத்தில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. அவளது சாட்சியமும் நம்பும் வகையில் உள்ளது. மேலும் எப்ஐஆர் பதிவு செய்வதிலும் எந்த தாமதமும் ஏற்படவில்லை. சிறுமியின் சாட்சியத்தின் அடிப்படியில் சங்கர் குற்றவாளி என தீர்க்கப்படுகிறார். இது குறித்த தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகியுள்ள சங்கருக்கு, அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating