சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் : ரஷ்யாவின் கண்டன தீர்மானம் பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி!!(உலக செய்தி)
ஐநா: சிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா உட்பட 3 நாடுகளை கண்டிப்பதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா, ஈரான் ராணுவங்கள், சிரியாவில் முகாமிட்டு கிளர்ச்சியாளர்கள், ஐஎஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஒன்றான டொமாவில் சிரிய ராணுவம் கடந்த வாரம் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ள ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. இதில், அப்பாவி பொதுமக்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதித்து உயிருக்கு போராடி வருகின்றனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகள் நேற்று முன்தினம் சிரியா தலைநகர் டமஸ்கஸ் மீது வான்வழி தாக்குதல் நடத்தின. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசி தாக்கின.இதில், டமஸ்கசில் உள்ள முக்கிய ரசாயன ஆயுத தயாரிப்பு தொழிற்சாலைகள், ஆய்வுக்கூடங்கள் சில தகர்க்கப்பட்டன. அமெரிக்க கூட்டுப்படைகளின் இந்த தாக்குதலை கண்டிப்பதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சலின் அவசரக் கூட்டத்தை ரஷ்யா நேற்று கூட்டியது. இதில், சிரியா மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதலில் இந்த நாடுகள் ஈடுபடக்கூடாது எனவும் ரஷ்யா தீர்மானம் கொண்டு வந்தது.
இந்த கூட்டத்தில், பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பு நாடுகளின் தூதர்களும், நிரந்தர உறுப்பினர் அல்லாத மற்ற 10 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், ரஷ்யாவின் தீர்மானத்தை ஆதரித்து சீனா, பொலிவியா நாடுகள் மட்டுமே வாக்களித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், குவைத், போலந்து மற்றும் ஐவரிகாஸ்ட் ஆகியவை தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இதன் மூலம், ரஷ்யாவின் தீர்மானம் தோற்டிக்கப்பட்டது.
Average Rating