ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பு தேர்தல் : இந்தியா மீண்டும் வெற்றி!!(உலக செய்தி)
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினருக்கான தேர்தலில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. ஐ.நா., சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினருக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் இந்தியா, சீனா, பஹ்ரைன், பாகிஸ்தான், பிரேசில், கியூபா, மெக்ஸிக்கோ உள்ளிட்ட நாடுகள் தேர்வு செய்யப்பட்டன. குறிப்பாக மற்ற நாடுகளைக் காட்டிலும் மிக அதிகபட்சமாக 46 வாக்குகளுடன் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறையும் இந்த தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. தேர்வு செய்யப்பட்ட நாடுகளின் பதவிக்காலம் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைகிறது.
இதுகுறித்து பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் சையது அக்பரூதின், ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவுக்கு பலமான ஆதரவு அளிக்கும் நட்பு நாடுகள் இருப்பதை மீண்டும் நிரூபணம் செய்வது போல இந்தத் தேர்தல் முடிவு அமைந்திருப்பதாக கூறியுள்ளார். இந்தியாவுக்கு மீண்டும் கிடைத்துள்ள வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, ஆதரவு அளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ஐ.நா., சபையின் ஆறு கவுன்சில்களில் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சில் மிக முக்கியமானது. பொருளாதாரம், சமூகம் குறித்து விவாதிக்கவும், சர்வதேச அளவில் கொள்கைகளை வகுக்கவும் இந்தக் கவுன்சில் பரிந்துரை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating