டிக்கெட் இல்லாமல் ரெயிலில் பயணம் செய்த உ.பி. மந்திரி பிடிபட்டார் -ரூ.14 ஆயிரம் அபராதம்
டிக்கெட் இல்லாமல் ரெயிலில் பயணம் செய்த உத்தரப்பிரதேச மாநில மந்திரி ஒருவர் பிடிபட்டார். அவருக்கு ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் `ஹஜ்’ துறை ராஜாங்க மந்திரியாக பதவி வகித்து வருபவர், யாக்கூப் குரேஷி. `லக்னோ-டெல்லி மெயில்’ ரெயிலில், அவர் தனது ஆதரவாளர்களுடன் முதல் வகுப்பு குளு குளு (ஏ.சி-1) வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்தார்.
லக்னோ புறநகர்ப் பகுதியான அலாம்நகர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் சோதனை நடத்தியபோது, மந்திரி குரேஷியிடம் உரிய பயண டிக்கெட் இல்லை. அதைத்தொடர்ந்து அவருக்கு ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அரசியல் சதி
இதுபற்றி மந்திரி குரோஷியிடம் நிருபர்கள் டெலிபோனில் தொடர்புகொண்டு கேட்டபோது தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதை மறுத்தார். அவர் மேலும் கூறியதாவது:-
“நானும் எனது உதவியாளர்களும் டிக்கெட் வைத்து இருந்தோம். டிக்கெட்டின் `போட்டோ நகலை’ பரிசோதகர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். நான் சொல்வதை காது கொடுத்து கேட்க மறுத்த அவர்கள், எனக்கு தொந்தரவு கொடுப்பதிலேயே குறியாக இருந்தனர். இந்த சம்பவம் எனக்கு எதிரான அரசியல் சதியாகும். இதுபற்றி மத்திய அரசுக்கு கடிதம் எழுத இருக்கிறேன். ரெயில்வே நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு தொடரவும் முடிவு செய்து இருக்கிறேன்.” இவ்வாறு மந்திரி குரேஷி கூறினார்.
அதிகாரிகள் மறுப்பு
ஆனால் ரெயில்வே அதிகாரிகள், மந்திரி சொன்னதை மறுத்தனர். ” அதிகாரிகள் மந்திரியிடம் டிக்கெட் கேட்டவுடனேயே அவருடன் இருந்த ஆதரவாளர்கள் கூச்சல் போட தொடங்கினார்கள். மந்திரியிடம் இருந்தது டிக்கெட் அல்ல. ரெயில்வே கூப்பன்தான்.” என்று அதிகாரிகள் தெரிவித்தனர். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த மந்திரி குரேஷி, அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருபவர் ஆவார்.
உ.பி.யில் ஆளும் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அவர், தங்கள் கட்சியின் மதக்கொள்கை முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதாக சமீபத்தில் கண்டனம் தெரிவித்து இருந்தார். நபிகள் நாயகத்தை விமர்சித்து கார்ட்டூன் வரைந்தவரின் `தலை’க்கு ரூ.51 கோடி `விலை’ நிர்ணயம் செய்தவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.