ஹேப்பி ப்ரக்னன்ஸி : பிரசவ கால கைடு – 17!!(மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 32 Second

பிரசவ கால கைடு – 17

– இளங்கோ கிருஷ்ணன்

ஹேப்பி ப்ரக்னன்ஸி தொடரின் இறுதி அத்தியாயம் இது. கர்ப்பம் என்றால் என்ன, கர்ப்ப காலத்தில் தாயின் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும், ஒவ்வொரு வாரமும் குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும், என்னென்ன பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். தாய்க்கு ஏற்படும் உபாதைகள் என்னென்ன? தீர்வு என்ன என்பதை எல்லாம் கடந்த வாரங்களில் பார்த்தோம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் தீவிரமான பிரச்சனைகள் என்னென்ன என்பதை இந்த வாரம் மொத்தமாகப் பார்த்துவிடுவோம்.

கருச்சிதைவு
கரு உருவான முதல் 20 வாரங்கள் மிகவும் முக்கியமான காலக்கட்டம். இந்தக் காலங்களில் நெடுந்தொலைவுப் பயணம், கணமான பொருட்களை தூக்குதல், நெடுந்தொலைவு நடத்தல், கடினமான வேலைகளைச் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள கூடாது. அளவுக்கு அதிகமான மனஅழுத்தம்கூட கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். எனவே, நல்ல ஆரோக்கியமான உணவுகள், போதுமான ஓய்வு, நிம்மதியான சூழல் இருக்க வேண்டியது அவசியம்.

10 முதல் 20 சதவிகிதம் வரையான கண்டறியப்பட்ட கர்ப்பங்கள் முதல் 20 வாரங்களில் கருச்சிதைவில் முடிவடைந்திருப்பதாக கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. இதில், 80 சதவீத கருச்சிதைவுகள் முதல் 12 வாரங்களில் நிகழ்கின்றனவாம். பெரும்பாலான இந்தக் கருச்சிதைவுக்கு குரோமோசோம் குறைபாடுதான் காரணம் என்கிறார்கள். எனவே, பாதுகாப்பாக இருப்பதன் மூலம் இந்தப் பேரிழப்பைத் தடுக்கலாம்.

ரத்தக்கசிவு
கர்ப்ப காலத்தில் தாயின் பிறப்புறுப்பில் ஏற்படும் ரத்தக்கசிவு என்பது மோசமான அறிகுறிகளில் ஒன்று. அதிகமான உதிரக் கசிவு, தீவிரமான அடிவயிற்று வலி, மாதவிலக்கின்போது ஏற்படுவது போன்ற வலி ஆகிய அறிகுறிகள் முதல் ட்ரைமஸ்டரின் போது இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். ஏனெனில் இந்த அறிகுறிகள் எக்டோபிக் ப்ரக்னன்ஸி எனும் பிரச்சனையாக இருக்கக்கூடும்.

தாயின் சினைப்பையில் உள்ள கருமுட்டையுடன் சேர்ந்த ஆணின் உயிரணு கருவாக உருப்பெற்ற பிறகு அங்கிருந்து பயணித்து கருப்பையில் போய் சேர வேண்டும். இந்தப் பயணம் முழுமையடையும் முன்பே அந்தக் கரு தாயின் பெலோப்பியன் ட்யூப் அல்லது வேறு எங்காவது தங்கி விட்டால் அந்த கர்ப்பத்தை எக்டோபிக் ப்ரக்னன்ஸி என்பார்கள். இந்த நிலையில் கர்ப்பத்தை இயல்பாகத் தொடர முடியாது. உடனடியாக அவசர சிகிச்சை தர வேண்டியது இருக்கும்.

முதல் ட்ரைமஸ்டரின் போதோ அல்லது இரண்டாவது ட்ரைமஸ்டரின் தொடக்கத்திலோ ரத்தக்கசிவு ஏற்படுவது கருச்சிதைவின் அறிகுறியாகவும் இருக்கலாம். மூன்றாவது ட்ரைமஸ்டரின் போது ரத்தக் கசிவு இருப்பது நஞ்சுக்கொடி விலகுதல் போன்ற தீவிரமான பிரச்சனையாகவும் இருக்கலம். கர்ப்ப காலத்தின் எந்த ட்ரைமஸ்டர் என்றாலும் ரத்தக்கசிவு தீவிரமான பிரச்சனைதான். எனவே, உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

ப்ரீஎக்லேம்ப்சியா (Preeclampsia)
இன்றைய கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் தீவிரமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. சராசரியாக ஐந்து சதவிகித கர்ப்பிணிகளுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது என்கிறது ஓர் அறிக்கை. கர்ப்பத்தின் போது தாய்க்கு உயர் ரத்த அழுத்தம் இருந்து வெளியேறும் சிறுநீரிலோ சிறுநீரகத்திலோ புரோட்டின் அளவு அதிகமாக இருந்தால் அது ப்ரீஎக்லேம்ப்சியாவாக இருக்கக்கூடும்.

இந்த பாதிப்பு கர்ப்ப காலம் வரையில் சிறிய அறிகுறியாகவே வெளிப்படும். வயிற்றில் உள்ள கருவும்கூட நன்றாகவே இருக்கும். ஆனால், இந்தப் பிரச்சனை திடீர் என்று மிக வேகமாகத் தீவிரம் அடையக்கூடும். ப்ரீஎக்லேம்ப்சியா பிரச்சனை உயிர் இழப்பு வரையிலும் ஏற்படுத்தக்கூடியது. இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு பெரும்பாலும் சிசேரியன்தான் பரிந்துரைக்கப்படும். ரத்த அழுத்தத்தில் சிறிய மாறுபாடு இருந்தாலும் உடனே மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டியது அவசியம்.

குறைவான அம்னியோட்டிக் திரவச் சுரப்புதாயின் கருப்பையில் அம்னியோட்டிக் திரவம் போதுமான அளவில் சுரந்தால்தான் வயிற்றில் உள்ள கரு ஆரோக்கியமாக வளரும் சிலருக்கு இந்த திரவம் குறைவாக இருக்கும். இதை ஒலிகோஹைட்ரம்னியோஸ் (Oligohyramnios) என்பார்கள். சராசரியாக நான்கு சதவிகித கர்ப்பிணிகளுக்கு மூன்றாவது ட்ரைமஸ்டரின்போது இந்தப் பிரச்சனை உள்ளதாகச் சொல்கிறார்கள். பரிசோதனைகள் மூலம் மருத்துவரால் இந்தப் பிரச்சனையை அடையாளம் காண முடியும்.

கர்ப்பகால சர்க்கரை நோய்
கர்ப்பகால சர்க்கரை நோய் என்பது இன்று அதிகரித்துவரும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. கருவுற்ற 24 – 28 வாரங்களில் குளுக்கோஸ் ஸ்கிரீனிங் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்தப் பரிசோதனையில் கர்ப்பகால சர்க்கரை நோய் இருப்பது உறுதியானால் உணவு, உடற்பயிற்சி என தாய் தன் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். மேலும், எப்போதும் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டியதும் அவசியம்.

பொதுவாக, உணவு மற்றும் உடற்பயிற்சி மூலமே கர்ப்ப கால சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டால் கருவின் உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்ப கால சர்க்கரையால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 30 சதவிகிதப் பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு டைப் 2 டயாபடீஸ் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

ப்ளெசென்டா ப்ரீவியா
நஞ்சுக்கொடி அமைப்பில் ஏற்படும் மாறுபாடு இது. நஞ்சுக்கொடி இறக்கம் என்பார்கள். கருப்பையையும் கருவையும் இணைக்கும் நஞ்சுக்கொடி அன்னையின் கருப்பையில் அடிப்பகுதிக்கு இறங்கிவிடும் நிலையை இது குறிக்கும். கர்ப்பத்தின் தொடக்க காலங்களில் ப்ளெசென்டா ப்ரீவியா பெரிய பிரச்சனை இல்லைதான். ஆனால், கரு வளர வளர அது ஒரு முக்கியமான பிரச்சனையாக உருவெடுக்கும். இதனால் அன்னைக்கு ரத்தக்கசிவு ஏற்படக்கூடும். குறைப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் தீவிரமான சிக்கல் இது. எனவே, இந்த பாதிப்பு உள்ளவர்கள் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

இரண்டாவது ட்ரைமஸ்டரின் போது செய்யப்படும் பரிசோதனையில் ப்ளெசென்டா எங்கு உள்ளது என்பதும் பரிசோதிக்கப்படும். பொதுவாக, கர்ப்ப காலத்தின் நடுப்பகுதியில் ப்ளெசென்டா ப்ரீவியா பிரச்சனை உள்ள பெண்களில் மிகச் சிலருக்கு மட்டுமே பிரசவ காலம் வரை இது தொடரும். அதாவது, சராசரியாக 200 பிரசவங்களில் ஒரு பெண்ணுக்கு இது நேர்வதாகச் சொல்கிறார்கள். எனவே, பெரிதாக அச்சப்பட வேண்டியது இல்லை. ஆனால், இந்தப் பிரச்சனை இருப்பது தெரிந்தால் உடனடியாக மருத்துவரின் தொடர் கண்காணிப்புக்குள் செல்வது பிரச்சனை தீவிரம் அடையாமல் காக்க உதவும்.

குறைப்பிரசவம்
37வது வாரத்துக்கு முன்பாக பிரசவ வலி ஏற்பட்டு பிரசவிக்க நேர்ந்தால் அதைக் குறைப்பிரசவம் என்பார்கள். அன்னையின் உடலில் சர்க்கரை நோய், ப்ளெசென்டா ப்ரீவியா போன்ற பாதிப்புகள் இருந்தாலோ வேறு ஏதேனும் கோளாறுகள் இருந்தாலோ மருத்துவர் சிசேரியன் அறுவைசிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்வார்.

இதுவும் குறைப்பிரசவமே. இப்படி பிரசவ காலம் முழுமையடையும் முன்பே பிறக்கும் குழந்தைகள் நியோநேட்டல் வார்டில் இன்குபெட்டரில் வைத்துப் பாதுகாக்கப்படுவார்கள். குழந்தையின் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் இப்படி அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. இன்றைய நவீன மருத்துவத்தில் குறைப்பிரசவம் என்பது ஆபத்தானது அல்ல. போதிய பாதுகாப்புடன் குழந்தையை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க முடியும் என்பதால் அச்சப்பட வேண்டியது இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தன் மனைவிக்கு தெரியாமல் கணவன் ஒரு கிப்ட் வாங்கி அதை மறைத்து வைத்து விளையாடும் காட்சி.!!(வீடியோ)
Next post கோவிலில் இந்த ஆண்ட்டி செய்யும் கேவலமான காரியத்தை பாருங்கள்!!(வீடியோ)