கடந்த 4 மாதங்களில் 48 பேருக்கு தலைதுண்டித்து மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபிய அரசு!!(உலக செய்தி)
சவுதி அரேபியாவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 48 பேருக்கு தலைதுண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘சவுதிஅரேபியாவில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீதான விசாரணை நடைமுறை மிகவும் கவலை அளிக்கிறது. சவுதியில் அதிக அளவில் மரண தண்டனை நிறைவேற்றுவது நல்லதல்ல. போதை பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை குறைக்க வேண்டும் என்றும் நீதித்துறை நடைமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும்“ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சமீபத்தில் பத்திரிகைக்கு பேட்டி அளித்த சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் “கொலை வழக்கை தவிர மற்ற குற்ற வழக்குகளில் மரண தண்டனைக்கு பதில் ஆயுள் தண்டனையாக குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றார். சவுதியில் கடந்த ஆண்டில் மட்டும் 150 பேரின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 2014-ம் ஆண்டு முதல் இதுவரை 600 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் போதைப் பொருள் கடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating