ராதிகா ஆப்தேவுடன் இணைந்து பாலியல் தொல்லையை அம்பலப்படுத்திய நடிகை !!? (சினிமா செய்தி)
திரையுலகில் காஸ்டிங் கவுச் மூலம் வாய்ப்பு பெறும் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதுபற்றி பல்வேறு நடிகைகள் பகிரங்கமாக கருத்து பகிர்ந்து வருகின்றனர். நடிகை ராதிகா ஆப்தே உள்ளிட்ட சில நடிகைகள் வெளிப்படையாக இதுகுறித்து தெரிவித்திருக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து ஆவணப்பட மொன்று தயாராகிறது. குறிப்பாக பாலிவுட் படவுலகம் பற்றி இதில் கூறப்பட்டிருக்கிறது. இதற்காக ராதிகா ஆப்தேவின் காட்சி படமாக்கப்பட்டது. அதில் ராதிகா ஆப்தே கூறும்போது,’திரையுலகில் சிலர் தங்களை கடவுள்போல் நினைத்துக்கொள்கின்றனர்.
அவர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருப்பதால் நான் கூறும் விவகாரம் எடுப்படாமல் போய்விடுகிறது. அல்லது பாலியல் தொல்லை குறித்து பேசினால் எனது திரையுலக வாழ்க்கையே முடக்கப்படும். ஹாலிவுட் திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை குறித்து தெரிவிக்க மீ டூ என்ற முகாமையே நடத்தி வருகிறார்கள். அதற்கு காரணம் மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதுதான். அதேபோல் இந்தியாவிலும் நடத்தப்பட வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய விருது பெற்ற மராட்டிய மொழி நடிகை உஷா ஜாதவ் கூறியது: திரையுலகில் அதிகாரம் படைத்தவர்கள் சிலர் பாலியல் குற்றச் செயல்கள் செய்கின்றனர். படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் எனக்கு பதிலுக்கு என்ன தருவாய் என்று ஒருவர் கேட்டார். உடனே நான், என்னிடம் பணம் எதுவும் கிடையாது என்றேன். உடனே அவர், இல்லை இல்லை நான் பணத்தை பற்றி பேசவில்லை, என்னுடன் இரவு தங்க வேண்டும் என்றார். ஒரு இயக்குனர் அல்லது தயாரிப்பாளர் இப்படி கூறுவதுண்டு அல்லது இருவரும் எதிர்பார்க்கிறார்கள்.
கிராமத்திலிருந்து புறப்பட்டு பாலிவுட்டில் நடிக்க வந்தபோது பல முறை நான் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறேன். நடிகையாக வேண்டுமென்றால் பாலியல் உறவுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றவர் எனக்கு அடிக்கடி முத்தம் கொடுத்தார், தொடவும் செய்தார். அதனால் அதிர்ச்சி அடைந்தேன். சில சமயம் அத்துமீறினார். அவரை தடுத்து நிறுத்தினேன். அதற்கு அவர், நடிகையாக இருக்க வேண்டுமென்றால் அதற்கான செயல்பாடு உன்னிடம் தெரியவில்லை என்றார். இவ்வாறு உஷா ஜாதவ் கூறினார்.
Average Rating