ஜாமீன் வழங்க மறுத்ததால் நீதிபதியை நோக்கி செருப்பு வீசிய வாலிபர்!!
அடிதடி வழக்கில் ஜாமீன் வழங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், தனது காலில் கிடந்த செருப்பை கழற்றி நீதிபதியை நோக்கி வீசினார். கர்நாடகா மாநிலம், ஹுப்பள்ளியை சேர்ந்தவர் ஷரீப் பசவராஜ் கம்ளி (24). இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன் அடிதடி சம்பவத்தில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ஹுப்பள்ளி நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதில், கம்ளி ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று காலை போலீசார் அவரை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது, கம்ளியின் வக்கீல் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி விஸ்வநாத் மொகதி, ஜாமீன் வழங்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த கம்ளி, தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி நீதிபதியை நோக்கி வீசினார். இதனால், நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, கம்ளியை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
Average Rating