`விரைவில் நல்ல காலம் வரும்’ வைரலாக பரவும் சாமியார் ஆசாராம் பாபு ஆடியோ!!
`விரைவில் நல்ல காலம் வரும் என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலாத்கார சாமியார் ஆசாராம் பாபு பேசியுள்ள ஆடியோ வைரலாக பரவி வருகிறது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாமியார் ஆசாராம் பாபு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக் கைதிகள் ஏதாவது 2 தொலைபேசி எண்களுக்கு மாதம் ஒரு மணி 20 நிமிடங்கள் பேசிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் ஆசாராம் பாபு, குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் உள்ள பக்தர் ஒருவருடன் 15 நிமிடங்கள் தொலைபேசியில் பேசும் ஆடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. நல்ல காலம் வரும் என்ற கருத்தை மையமாக கொண்டு அவர் நேற்று முன்தினம் பேசிய ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது. அதில், `தீர்ப்பு நாளில் ஜோத்பூர் வராமல் அமைதி காத்த எனது பக்தர்கள் அனைவருக்கும் நன்றி. சிலர் ஆசிரமத்தின் புகழை கெடுக்கும் வகையில் பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும், ஆசிரமத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். நாம் சட்டம் ஒழுங்குக்கு மரியாதை தர வேண்டும்.
நானும் அதை தான் செய்து வருகிறேன். சிறப்பு நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சில்பி, சரத் சாந்தா ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை பெற ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களின் குழந்தைகளுக்காக அவர்கள் இருவரையும் விடுவிக்க வேண்டும். இதற்காக கூடுதல் வக்கீல்களை நியமனம் செய்து வாதாடி அவர்களை வெளியே கொண்டு வரவேண்டும். அதன்பின் நான் சிறையில் இருந்து விடுதலை பெறுவேன். பொய்களுக்கு கால்கள் இல்லை. இதனால், அது நிலைத்து நிற்காது. விரைவில் நல்ல காலம் வரும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
Average Rating