சொந்த பிள்ளைகளை கொன்று உடலை எரித்த தாய்!!(உலக செய்தி)
ரஷ்யாவில் இன்ஸ்டாகிராம் ஸ்டாராக வலம் வந்த இளம் தாயார் ஒருவர் தமது பிள்ளைகளை கழுத்தை நெரித்து கொன்று உடல்களை எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ரஷ்ய நாட்டவர்களில் மிகவும் பிரலமானவர்களில் ஒருவர் 27 வயதான ஹெலனா கரிமோன.
இவருக்கு 21,000 சந்தாதாரர்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர் தமது இரு பிள்ளைகளை கழுத்தை நெரித்து கொன்று அவர்களது உடல்களை எரித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் சம்பவத்தன்று தனது பிள்ளைகளான கதீஜா மற்றும் சுலைமான் ஆகிய இரு சிறுவர்களையும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.
பின்னர் பெட்ரோல் நிலையம் சென்று தேவையான எரிபொருளை வாங்கி வந்து, தனது வீட்டின் அருகாமையில் உள்ள வனப்பகுதிக்கு உடல்களை எடுத்துச் சென்று பிள்ளைகளின் உடலுக்கு நெருப்பு வைத்துள்ளார்.
இதனிடையே தாம் பிடிக்கப்படுவோம் என அஞ்சிய அவர் எரிந்து கட்டையாக கிடந்த உடல்களை எடுத்து வந்து கைவிடப்பட்ட ஒரு பாழடைந்த கட்டிடத்தில் வைத்து மீண்டும் நெருப்பு வைத்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.
பாழடைந்த கட்டிடத்தில் இருந்து புகை கிளம்புவதை பார்த்த தீயணைப்பு குழு வீரர் ஒருவர், உடனடியாக அப்பகுதிக்கு சென்று விசாரித்துள்ளார்.
அதில் பாதி எரிந்த நிலையில் உடல் பாகம் சிக்கியுள்ளது. தொடர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுவர்களின் எரிந்த உடல்களை மீட்டுள்ளனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராக்களை ஆய்வு செய்த பொலிசார், அங்கு வந்து சென்ற வாகனம் ஒன்றின் பதிவு எண்ணை வைத்து குறித்த இளம் தாயாரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தாம் நடத்தி வந்த தொழிலில் இழப்பு ஏற்பட்டதை அடுத்து வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனதாக குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி தம்மால் தனது இரு பிள்ளைகளையும் உணவு, உடையின்றி பரிதவிப்புக்கு உள்ளாக்க முடியாது எனவும், அதனாலேயே கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹெலனாவின் இந்த கொடுஞ்செயல் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Average Rating