நிறைமாத கர்ப்பிணிக்கு மருத்துவமனையில் அனுமதி மறுப்பு : இரவு தங்குமிடத்தில் குழந்தை பெற்ற பரிதாபம்!!( உலக செய்தி)
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள மாவட்ட பெண்கள் மருத்துவமனைக்கு காஜல் என்ற நிறைமாத கர்ப்பிணியை சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அழைத்து வந்தனர். ஆனால் அவரை உள்நோயாளியாக அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையின் தங்கும் இடத்தில் அவரை அழைத்து சென்றனர். அவருக்கு வலி அதிகமான நிலையில், அங்கேயே குழந்தை பிறந்துள்ளது. நிறைமாத கர்ப்பிணியிடம் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக நடந்துக் கொண்டதாக அந்தப் பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுக்கு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் அமிதா கார்க் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “பிரசவத்திற்காக அழைத்து வரப்பட்ட அந்தப் பெண்ணுக்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவிக்கப்படவில்லை. மாறாக, அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஆனால், அந்தப் பெண்ணின் உறவினர்கள் இரவு தங்குமிடத்தில் அவரை தங்க வைத்துள்ளனர். குழந்தை பிறந்ததை அடுத்து அந்தப் பெண்ணுக்கு மருத்துவர்கள் சிகிச்சையும் அளித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
Average Rating