கடத்தப்பட்ட இந்திய இன்ஜினியர்களை மீட்க பழங்குடி மக்கள் உதவியுடன் ஆப்கான் படைகள் தேடுதல்!!(உலக செய்தி )
ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட 7 இந்திய இன்ஜினியர்களை மீட்க, பழங்குடியின மக்களின் தலைவர்கள் உதவியை ஆப்கன் அதிகாரிகள் நாடியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் வடக்கு பக்லான் மாகாணத்தில் இயங்கி வரும் கேஇசி சர்வதேச தனியார் நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த இன்ஜினியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் செஷ்மா இ ஷெர் பகுதியில் இருந்து பணி செய்யும் இடத்திற்கு இன்ஜினியர்கள் பேருந்தில் சென்றனர். அப்போது ஆயுதங்களுடன் பேருந்தை வழி மறித்த மர்ம கும்பல், 7 இந்திய இன்ஜினியர்களை கடத்தி சென்றது.
இந்திய இன்ஜினியர்கள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கடத்தல் சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், கடத்தப்பட்ட இன்ஜினியர்களை ஆப்கன் படைகள் தீவிரமாக தேடி வருகின்றன. இதற்காக, உள்ளூர் பழங்குடியினத்தை சேர்ந்த தலைவர்களின் உதவியை ஆப்கன் அரசும், பாதுகாப்பு படைகளும் நாடியுள்ளன. அதே நேரம், கடத்தப்பட்ட இந்தியர்களின் நிலையை அறிவதற்காக ஆப்கன் அதிகாரிகளுடன் மத்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து இணைப்பில் உள்ளது.
ஏற்கனவே, ஆப்கனில் இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 2016ம் ஆண்டு ஜூடித் டிசோசா என்ற இந்திய பணியாளர் தலிபான்களால் கடத்தப்பட்டார். 40 நாட்களுக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
Average Rating