டவுட் கார்னர் ?(மகளிர் பக்கம்)
எனக்கு 22 வயதாகிறது. இர்ரெகுலர் பீரியட்ஸ் காரணமாக அவதியுறுகிறேன். மருந்து மாத்திரைகள் இல்லாமல் உணவுப் பழக்கத்தின் வழியாகவே மாதவிடாயை ஒழுங்குப்படுத்த முடியுமா?
– எஸ். யாழினி, பொள்ளாச்சி.
பதிலளிக்கிறார் சித்த மருத்துவர் காசிப்பிச்சை… “பெண்களின் கர்ப்பப்பை தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் சோற்றுக் கற்றாழைக்கு மட்டுமே இருக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய மருத்துவத்தில் சோற்றுக் கற்றாழைக்கு முக்கிய இடமுண்டு. சோற்றுக் கற்றாழையின் தோலை சீவி விட்டு உள்ளிருக்கும் கற்றாழைச் சோற்றை எடுத்து கழுவ வேண்டும். பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக்கி சாப்பிட வேண்டும். தினமும் சாப்பிட வேண்டும் என்று கூட அவசியமில்லை. வாரத்துக்கு இரண்டு முறை இரண்டு மடல் கற்றாழையை சாப்பிட்டால் போதுமானது.
சாப்பாட்டுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் கழித்துதான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். மாலை 5 மணி இதற்கு சரியான நேரம். இப்படி தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதன் மூலம் கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் குணமாகும். ரத்தசோகை காரணமாகவும் முறை தவறி மாதவிடாய் ஏற்படும். அப்படியான சூழலில் ரத்தத்தன்மையை அதிகரிக்க முருங்கைக்கீரை, கறிவேப்பிலை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கால்சியம் சத்து அதிகமுள்ள பிரண்டையைத் துவையலாக்கி சாப்பிடலாம். கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் அதிகம் இருக்கக் கூடிய தென்னம்பூவை சாப்பிட்டு வரலாம்.
பெண்கள் பூப்பெய்தினால் கிராமங்களில் தென்னை ஓலையில் குடிசை கட்டுவார்கள். தென்னை ஓலையிலிருந்து வெளிப்படும் பாஸ்பரஸ் மாதவிடாயை சீர்படுத்தும் என்கிற காரணத்தாலேயே அவ்வாறு செய்யப்பட்டது. பொட்டாசியம் அதிகம் இருக்கக் கூடிய இளநீர் குடிக்க வேண்டும். சமையலில் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் பச்சைத் தேங்காயை அதிக அளவில் சாப்பிட்டு வர வேண்டும். கர்ப்பப்பை தொடர்பான பிரச்னை கொண்டவர்கள் மட்டுமல்லாமல் பெண்கள் அனைவரும் மேற் சொன்னவற்றை பின்பற்றலாம்” என்கிறார் காசிப்பிச்சை.
Average Rating