டவுட் கார்னர்?(மகளிர் பக்கம்)
ஆர்கானிக் கடைகள் இன்றைக்கு பலநூறாக பெருகிக் கிடக்கின்றன. இக்கடைகளில் விற்கப்படும் விளை பொருட்கள் உண்மையிலேயே இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டதுதான் என்பதை எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது?
– அனுப்ரியா, கோவை.
பதிலளிக்கிறார் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து… விற்பனையாளருக்கு விளைபொருள் எங்கு உற்பத்தி செய்யப்பட்டது? அதனை உற்பத்தி செய்த விவசாயியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். எந்த வழி முறையில் இயற்கையாக விளைவிக்கப்படுகிறது என்பதை அவர்கள் களத்துக்குச் சென்று பார்த்திருக்க வேண்டும். மேற்சொன்ன விவரங்கள் விற்பனையாளருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றால் அது சந்தேகத்துக்குரியது. நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் ஆர்கானிக் கடைகளே சிறந்தவை. இடைத்தரகர்கள் மூலம் வரும் பொருட்களின் உண்மைத்தன்மை சந்தேகத்துக்கு இடமானது.
ஏனென்றால் உணவுக்கலப்படம் இடைத்தரகர்களால்தான் பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது. ஆர்கானிக் பொருட்களின் விற்பனையை ஒழுங்குபடுத்த அரசின் தலையீடு இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும். அதில் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி விளைபொருள் இயற்கை மூலம் விளைவிக்கப்பட்டதா? இல்லை ரசாயனங்கள் மூலம் விளைவிக்கப்பட்டதா? என்பதை ஆய்வு செய்து கண்டறியலாம் என்கிற சூழலை உருவாக்கினால் இது ஒழுங்காக வாய்ப்பிருக்கிறது.
ஆர்கானிக் கடைகளுக்கு அரசின் மூலம் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. அச்சான்று, விளைவிக்கும் முறைக்குத்தானே அன்றி விளைபொருளுக்கு அல்ல. அச்சான்றிதழைக் கொண்டு மட்டும் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டது என்று நம்ப முடியாது. விற்பனையாளரிடம் விளைபொருள் குறித்த பல கேள்விகளை எழுப்ப வேண்டும். தான் விற்கும் பொருள் குறித்த தெளிவு இல்லாத வியாபாரியிடம் நாம் வாங்க வேண்டாம்’’ என்கிறார்.
(வாசகர்கள் இது போன்ற சந்தேகங்களை எங்களுடைய முகவரிக்கு அனுப்பலாம். உங்களுடைய சந்தேகங்களுக்கு ‘டவுட் கார்னர்’ பகுதியில் விடை கிடைக்கும்.)
Average Rating