வடகொரியாவுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை இரத்து செய்த ட்ரம்ப்!!
வடகொரியாவுடன் வரும் 12 ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை இரத்து செய்யப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதம் தொடர்பாக கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தென்கொரியா, வடகொரியா நாடுகளின் தலைவர்கள் அண்மையில் சந்தித்துப் பேசினர். இதையடுத்து, அந்த இருநாடுகளுக்கும் இடையேயான பதற்றம் சிறிது தணிந்தது.
இதேபோல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இடையே சிங்கப்பூரில் வரும் ஜுன் மாதம் 12 ஆம் திகதி அமைதி பேச்சுவார்த்தை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில் ´மேக்ஸ் தண்டர்´ என்ற பெயரில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா இராணுவம் ஒத்திகை நடத்தியது. இதைக் கண்டித்து, தென் கொரியாவுடன் புதன்கிழமை நடக்கவிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா அதிரடியாக இரத்து செய்தது. இதையடுத்து, அமெரிக்காவுடனான மாநாட்டையும் இரத்து செய்ய நேரிடும் என வடகொரியா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வடகொரியா வெளியுறவுத் துறை துணை அமைச்சர் கிம் கி கிவான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தன்னிச்சையாக அணுஆயுதங்களை கைவிட வேண்டும் என்று எங்கள் நாட்டை அமெரிக்கா கட்டாயப்படுத்த முயன்றால், அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நாங்கள் விரும்ப மாட்டோம். சிங்கப்பூரில் ஜுன் 12 ஆம் திகதி, அமெரிக்க ஜனாதிபதி – வடகொரிய ஜனாதிபதி இடையேயான பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து வடகொரியா மறுபரிசீலனை செய்யும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வடகொரியாவுடன் வரும் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை இரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு ட்ரம்ப் எழுதியுள்ள கடிதத்தின் நகல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிங்கப்பூரில் வரும் ஜுன் மாதம் 12 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதி பேச்சுவார்த்தை மாநாடு இரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating