சர்வதேச யோகா தினம் அமெரிக்காவில் உற்சாகம்!!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் யோகாசன நிகழ்ச்சிகள் நடைபெற தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஏற்ற ஐக்கிய நாடுகள் சபை, ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தது. இதன்படி 177 நாடுகளில் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பல்வேறு யோகா பயிற்சிகள் நடைபெறும். இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் வருகிற 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் நேற்று முன்தினம் முதலே யோகா நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கி உள்ளன.
இந்திய தூதரகம் சார்பில் நியூயார்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சர்வதேச யோகா தினத்தில் பலதரப்பட்ட மக்களும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். சுதந்திர தேவியின் பின்னணியில் சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த யோகா பயிற்சியில், சூர்ய நமஸ்காரம், பிரணாயாமா, மூச்சு பயிற்சி மற்றும் பல்வேறு ஆசனங்கள் கற்றுத் தரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒரே நிறத்தினாலான சீருடை அணிந்த சிறுவர்கள் செய்த யோகா பயிற்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதில் கலந்துகொண்ட இந்திய தூதர் சந்தீப் சக்ரவோர்தி கூறுகையில், “ யோகாவை விட இரண்டு நாடுகளையும் சிறப்பாக இணைக்கும் கருவி வேறொன்றும் கிடையாது. இந்தியாவில் உருவான ஒன்று அமெரிக்காவில் பிரபலமாக உள்ளது.
இது இருநாட்டு உறவிற்கான ஒரு சிறந்த உதாரணமாகும். 4வது சர்வதேச யோகா தினம் நமது அன்றாட வாழ்க்கையில் யோகாவின் முக்கியத்துவத்தை விளக்கும் ஒரு நல்ல செய்தியை நமக்கு அளிக்கின்றது” என்றார். இதேபோல் வாஷிங்டனில் உள்ள கேப்பிடல் ஹில் பகுதியிலும் சனிக்கிழமை நடந்த யோகாசன பயிற்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்திய தூதர் நவ்டெஜ் சிங் சார்னா இதில் கலந்து கொண்டார். இங்கு வசிக்கும் ஏராளமான இந்தியர்களும் இந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Average Rating