புலிகளின் ஆயுதக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது
கிழக்கு பிராந்திய ஆழ்கடலில் புலிகளின் ஆயுதக்கப்பல் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம் தாக்கியழிக்கப்பட்டது. கல்முனைக்கு அப்பால் 120 கடல் மைல்களுக்கு அப்பால் மேற்படி கப்பலை அவதானித்த கடற்படையினர் சர்வதேச விதிமுறைகளின் கீழ் கப்பலுடன் தொலைதொடர்பினை ஏற்படுத்திய போதும, அதிலிருந்து உரிய பதில்கள் ஏதும் வழங்கப்படவில்லை. இதனை அடுத்து அந்தக் கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லும்படி கடற்படையினர் விடுத்த உத்தரவினை உதாசீனம் செய்த கப்பலில் இருந்தோர், அதனை சர்வதேச கடற்பரப்பினை நோக்கி செலுத்தத் தொடங்கினர். உடனடியாக செயலில் இறங்கிய கடற்படையினர் எச்சரிக்கை வேட்டுக்களைத் தீர்த்த போது கப்பலில் இருந்து பதில் தாக்குதல் நடாத்தப்பட்டது.
இதனை அடுத்து அது புலிகளின் கப்பல் என்பதனை ஊர்ஜிதப்படுத்திய கடற்படையினர் விமானப் படையினருக்கு தகவலை வழங்கிய பின் தாக்குதலை ஆரம்பித்தனர். இவ்வேளை விமானப்படையினரின் ஜெட் விமானங்களும் தாக்குதலை நடாத்தின.
இதனை அடுத்து கப்பலில் இருந்த பெருந்தொகையான வெடிபொருட்களும் ஆயுத தளபாடங்களும் தீப்பற்றி வெடித்துச் சிதறியதுடன் கப்பலும் நிர்மூலமாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்