கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!(உலக செய்தி)
சவுதி அரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990ம் ஆண்டுகளில் இருந்தே பெண்கள் உரிமை சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மீறி கார் ஓட்டிய பெண்கள் கைது செய்யப்பட்டனர். அபராதமும் விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை சவுதி அரேபிய அரசு நீக்கியுள்ளது. அதை தொடர்ந்து 2018ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்று முதல் பெண்கள் கார் ஓட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் அவர்கள் மன மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுக்கு இது தன்னம்பிக்கையை கொடுக்கும் விஷயமாக கருதப்படுகிறது.
மன்னர் சால்மனின் இளைய மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சவுதி அரேபியாவில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அங்கு இதுவரை விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் சென்று பார்க்க அனுமதி இல்லை. தலைநகர் ரியாத்தில் தேசிய தின கொண்டாட்டத்தின் போது நடந்த விளையாட்டு போட்டியை பார்க்க பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது கார் ஓட்ட அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating