கைலாஷ் யாத்திரை சென்று நேபாளில் சிக்கியுள்ள 525 இந்தியர்களில், 104 பேர் மீட்பு!(உலக செய்தி)
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நேபாளத்துக்குச் சென்று, கனமழையால் திரும்பி வர முடியாமல் தவித்த 104 இந்தியர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட நிலையில், சிமிகோட் பகுதியில் மேலும் 5 சிறிய ரக விமானங்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. மத்திய அரசின் முயற்சியால் நேபாள அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. கைலாஷ் மானசரோவருக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். உத்தரகாண்ட், சிக்கிம் வழியாக மேற்கொள்ளப்படும் இந்த யாத்திரை கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கியது.
இதில், தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். கடந்த வாரம் கைலாஷ் மானசரோவர் யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பிய பக்தர்கள், கனமழை காரணமாக நேபாளத்தின் சிமிகோட் பகுதியில் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியாகின. அங்கு சுமார் 1,300 பக்தர்கள் தங்குவதற்கு போதிய வசதியின்றி, உணவு பற்றாக்குறையுடன் இருப்பதாக கூறப்பட்டது.
இதில், சுமார் 525 பேர் இந்தியர்கள் என்றும், தமிழகத்தை சேர்ந்த 300 பேர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பக்தர்களை காத்மாண்டு வருவதற்கான அனைத்து விமான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டதால் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருவதாக பக்தர்கள் தங்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சிக்கித்தவிக்கும் பயணிகளை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், வெளியுறவுத்துறை அதிகாரிகள் சிமிகோட் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு யாத்ரீகர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 104 பேர் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating