உடன்படாதவர்களுக்கு பாலியல் தொல்லை … பிஷப் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!!
ஜலந்தர் பிஷப்பின் பாலியல் கொடுமையை தாங்க முடியாமல் 18 கன்னியாஸ்திரிகள் சபையை விட்டு வெளியே சென்று விட்டனர் என்று பலாத்காரத்திற்கு உள்ளான கன்னியாஸ்திரி குற்றம்சாட்டியுள்ளார்.பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள சர்ச்சின் பிஷப்பான பிராங்கோ, கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வைக்கம் டிஎஸ்பி சுபாஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாஸ்திரியின் உறவினர்களிடம் இந்த சம்பவம் குறித்து போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர்கள் பிஷப் பிராங்கோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களையும் மிரட்டினர் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில், பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரி அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிஷப் பிராங்கோ என்னை 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை 13 முறை பலாத்காரம் செய்தார். நான் அவரது ஆசைக்கு இணங்க மறுத்த போதெல்லாம் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். மனரீதியாக பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கினார். இந்த பிரச்னையை சபைக்குள்ளேயே தீர்க்கலாம் என் நான் கருதினேன். ஆனால், எந்த பயனும் ஏற்படவில்லை. சபையை சேர்ந்தவர்களே எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால்தான், போலீசிடம் புகார் செய்யும் நிலை ஏற்பட்டது. கொச்சியில் சமீபத்தில் இந்திய கத்தோலிக்க பிஷப்புகள் மாநாடு நடந்தது. அப்போது, வாடிகனில் இருந்து போப் ஆண்டவரின் பிரதிநிதியும் வந்திருந்தார். அவரிடமும் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளேன். எனவே, அந்த புகாரின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கருதுகிறேன். மேலும், பிஷப்புக்கு நெருக்கமான ஒரு பாதிரியார் என்னுடைய தங்கை மற்றும் குடும்பத்தினரை மிரட்டினார். பிஷப்புக்கு எதிரான புகாரை வாபஸ் பெறாவிட்டால் தங்கையின் கணவர், மகனை கொலை செய்துவிடுவோம் என மிரட்டினார். எனது தங்கை குடும்பத்தினர் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் வசித்து வருகின்றனர். அவர்கள் வீட்டுக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பிஷப் பிராங்கோ என்னை மட்டுமல்லாமல் தனக்கு உடன்படாத கன்னியாஸ்திரிகளை பல வகைகளில் கொடுமைப்படுத்தினார். இவரது கொடுமையை தாங்க முடியாமல் 18 கன்னியாஸ்திரிகள் சபையை விட்டு வெளியே சென்றுவிட்டனர். இதனால், 5 மடங்கள் பூட்டப்பட்டுவிட்டன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். பிஷப்புக்கு எதிரான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது எனவே, விரைவில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Average Rating