சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்!!( உலக செய்தி)
சென்னையில் 11 வயதுச் சிறுமி ஒருவரை பல மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய 17 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்கள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் நேற்று (17) பிற்பகல் 1.30 மணியளவில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மஹிளா நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 3.30 மணியளவில் நீதிமன்ற நடைமுறைகள் நிறைவடைந்து அவர்கள் வெளியில் அழைத்து வரப்பட்டனர்.
படிகள் மூலம் மூன்றாவது தளத்திலிருந்து தரைத்தளத்திற்கு அழைத்து வரும்போது அங்கு கூடியிருந்த வழக்கறிஞர்களும் சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலரும் இந்த 17 பேரையும் கடுமையாகத் தாக்கினர். இதில் நான்கு பேர் மிக மோசமாகத் தாக்கப்பட்டனர்.
இதையடுத்து பொலிஸார் ஓடிவந்து 17 பேரையும் மீட்டு வேறொரு அறையில் அடைத்தனர். இப்போது பாதுகாப்பிற்காக அங்கே பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகப் போவதில்லையென தெரிவித்தார்.
இலவச சட்ட உதவி மையம் மூலமாகவும் யாரும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராகப் போவதில்லையென்றும் தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு இதனை எழுத்து மூலமாகத் தெரிவித்து ஆதரவு கோரப்போவதாகவும் கூறியிருக்கிறார்.
Average Rating