பள்ளிக்கூடங்கள் எப்படி இருக்க வேண்டும்? (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 9 Second

கல்வி கற்பது இன்றைய அவசியமான தேவையாக உள்ளது. லட்சக்கணக்கான பள்ளிகள் உருவாகியுள்ளன. கல்வியின் தேவை அதிகரித்துள்ள நிலையில் ஆசிரியர் குழந்தைகள் உறவுக்கான விழுமியங்கள் குறித்து நாம் சிந்திக்கவேண்டியுள்ளது. மதிப்பெண் பெறவைப்பது, படிப்புக்கான சான்றிதழ் பெற வைப்பது, பிழைப்புக்கான வழி தேட வைப்பது இத்தோடு ஓர் ஆசிரியரின் கடமை முடிந்து போவதில்லை.

குழந்தைகளை மையப் படுத்துவ‌தாக கல்வி இருக்க வேண்டும். குழந்தைகளின் இயல்புகள், உணர்ச்சிகள், வாழ்க்கைச் சூழல்கள், தேவைகள், விருப்பங்கள் ஆகியவற்றை முதன்மைக் காரணிகளாகக் கொண்டே கல்வித்திட்டமும் பள்ளியும் அமையவேண்டும். குழந்தைகளே கல்வியின் நடுநாயகம் என்பதைத் தான் பல நாடுகளின் கல்வித் தத்துவங்களும் கூறுகின்றன. குழந்தை நேயம் என்பது பெற்றோர், உற்றார், உறவினர் ஆகியோர் மட்டும் சார்ந்ததல்ல. இவை எல்லாவற்றையும் தாண்டி கல்விக் கூடங்கள் போன்ற பொதுவெளியில் குழந்தை நேயம் மலரவேண்டும்.

பல ஆசிரியர்கள் குழந்தை நேயமிக்கவர்களாக இருக்கிறார்கள். வீட்டுப் பாடம் எழுதவில்லை என்றால் பிரம்படி வாங்குவது, கல்விக் கட்டணத் தாமதத்தினால் குழந்தைகள் வகுப்பிலிருந்து வெளியேற்றப்படுவது, மதிப்பெண் குறைவினால் குழந்தைகள் கண்ணீர் விடுவது, தேர்வுத் தோல்வியால் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வது, வசதி படைத்த குழந்தைகளுக்கு குளிர்சாதன வகுப்பறை உள்ள பள்ளிகள், வசதியற்ற ஏழைக் குழந்தைகளுக்கு வகுப்பறைகளே இல்லாத பள்ளிகள் என்ற பாகுபாடு நிலவுவது, வறுமையால் குழந்தைகள் பசி, பட்டினிக்கு ஆளாவது போன்ற கொடுமைகள் அன்றாடம் நமது கல்விச்சூழலில் இருப்பதை மறுக்க முடியாது.

இப்படிப்பட்ட அவலச்சூழலில் இருந்து நாம் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும். ஆசிரியர்களால் பள்ளிகள் புத்தொளி பெறவேண்டும். குழந்தை நேயமிக்கக் கல்வி க்கொள்கைகள், கல்வி அமைப்புகள், கலைத்திட்டங்கள் மற்றும் பாடத்திட்டங்கள், ஆசிரியர் பயிற்சிகள், கற்பித்தல் முறைகள் ஆகியவை இன்று நடைமுறையில் எந்த அளவிற்கு சாத்தியமாகியுள்ளன. அதற்கான தடைகள் என்ன? தடைகளைத் தாண்டி நாம் குழந்தை நேயம் மிக்க கல்விச் சூழலை எப்படி உருவாக்கப் போகிறோம்? இத்தகைய சிக்கல்களுக்கான விடை தேடலில் யார் அக்கறை கொண்டிருக்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளையும் நாம் தேடவேண்டியுள்ளது.

தன்னுடைய ஊதியத்தை தனது பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்காகச் செலவிட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், கல்விப் பணிக்காக தங்கள் குடும்பத்தை இழந்த ஆசிரியர்கள், வகுப்பிலிருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பலரிடம் கையேந்தி சிலரிடம் அவமானங்களையும் சிலரிடம் வளங்களையும் பெற்று பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திய ஆசிரியர்கள், வகுப்பறைக்குள் முடங்கிக் கிடக்கும் மாணவர்களை களப்பயணம் போன்ற நிகழ்வுகள் மூலம் வெளியுலகத்தைக் காட்ட தனது சொந்தச் செலவில் அழைத்துச் செல்லும் ஆசிரியர்கள், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வகுப்பறைச் சூழலை நவீன வசதிகளாக்கும் ஆசிரியர்கள் பலர் அரசுப்பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர்.

தனியார் பள்ளியாக இருந்தாலும், அரசுப் பள்ளியாக இருந்தாலும் அனைத்துக் குழந்தைகளுடைய கல்வியில் மாற்றங்கள் வரவேண்டும், கல்வி வளர வேண்டும், அறிவு வளர வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கவேண்டும். ஆசிரியர்களின் முழு அர்ப்பணிப்பு இல்லாமல் இவற்றைச் சாத்தியமாக்க முடியாது. அரசுப்பள்ளிகளை மிகச்சிறப்பாக நடத்துகின்றோம். குழந்தைகளை நேசிக்கின்றோம். குழந்தைகளுக்கு அக்கறையுடன் நன்கு கற்றுத்தருகிறோம் என்று ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு புரியவைக்க வேண்டும். உறுதி கொடுக்க வேண்டும்.

பள்ளி என்றாலே குழந்தைகளுக்காக, குழந்தைகள் நலத்திற்காகத்தான். குழந்தைகளின் நலத்தைப் பேணிக்காத்து சிறப்பாக வளர்ப்பதுதான் பள்ளி. அரசுப்பள்ளிகள் சிறந்த பள்ளிகள் என நிரூபிக்கும் வகையில் ஆசிரியர்கள் பணியாற்றவேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு ஆசிரியர்களின் சிந்தனைகளில், வாழ்வியல் முறைகளில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். “பள்ளிக்கூடம் என்பது நாகரிக உலகின் முன் அறிவிக்கப்படாத கொத்தடிமைமுறை: குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் சமூகம் அங்கீகரிக்கும் கொடிய வன்முறை.

குழந்தைகள் தேர்வில் தோற்றுப்போவது பள்ளிக்கூடங்கள் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்ட பிறகும் நடப்பதல்ல. மாறாக குழந்தைகள் தோற்பதற்குக் காரணமே பள்ளிகள் தான். பள்ளிக்கூடங்கள் மனிதக் கண்டுபிடிப்புகளிலேயே மிகவும் தோல்வியடைந்ததும் கொடியதும் ஆகும்” என்று ஜான் கால்ட்வெல் கோல்ட் என்ற அமெரிக்க கல்வியாளர் கூறுகிறார். ஆசிரியர்-மாணவர் உறவை மென்மையாக்கி கரடுமுரடாக இருக்கும் நமது கல்வி அமைப்பை மேலும் செதுக்குவதற்கு ஜான் கோல்ட் போன்ற கல்வியாளர்களின் சிந்தனைகளை நமது ஆசிரியர்கள் உள்வாங்க வேண்டும் ஒரு நாட்டின் உண்மையான மதிப்புமிக்க செல்வம் குழந்தைகள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதைவிட பலவகைப்பட்ட இன்னல்களுக்கு அதிகமாக ஆளாக்கப்படுபவர்களும் குழந்தைகளே என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். குழந்தைகளின் இயற்கையான உயிரியல் சார்ந்த, உளவியல் சார்ந்த, உடலியல் சார்ந்த இயல்புகளையும் தேவைகளையும் புரிந்துகொண்டு குழந்தை நேயமிக்க கொள்கைகள் உருவாக்கப்படும் சூழல் இன்னும் முழுமையாக வளர்ச்சிய டையவில்லை என்பதே இன்றைய யதார்த்த நிலையாகும். கொள்கைகள் இருந்தாலும் அவை ஏட்டளவில் மட்டுமே உள்ளன.

சத்தான உணவு, சுத்தமான நீர், பாதுகாப்பான இருப்பிடம், உடுத்தத் தேவையான உடை, ஆரோக்கியமாக வாழ்வதற்கான மருத்துவம், முன்னேறுவதற்கு சமவாய்ப்பளிக்கும் கல்வி, மனித நேயமிக்க சமூக உறவு, குழந்தைநேயமிக்க பள்ளிச் சூழல் இவைகளெல்லாம் குழந்தைகளாக இருப்போரில் சரிபாதியினருக்கு இன்னும் கிடைக்கவில்லை. இதைத்தான் “ஒரு நல்ல மக்களாட்சி சமூக அமைப்பினுடைய உருவாக்கத்திற்கு கல்வி உதவுவதாக இருக்கவேண்டும்… அவலங்களும் போராட்டங்களும் நிறைந்ததாக உள்ள சமூகத்திற்குள் அன்பு நிறைந்த சமூகமாய் பள்ளிக்கூடத்தை மாற்றி அமைக்கவேண்டும்.

குழந்தைகளின் மீது கருத்துகளையோ கட்டுப்பாடுகளையோ திணிப்பதல்ல ஆசிரியரின் பணி… சரியான சமூகச் சிந்தனையைச் செயல்படுத்தவும் குழந்தைகளைத் தயார்படுத்தவும் சமூகத்தால் அமர்த்தப்படுபவர்கள் தான் ஆசிரியர்கள். இந்த சமூகப் பொறுப்பை ஆசிரியர்கள் நிறைவேற்றவேண்டும்” என்று நூற்றாண்டுகளுக்கு முன்பே கல்வியாளர் ஜான் டூயி வலியுறுத்தினார். “சுதந்திரத்தைக் கொடுப்பது எதுவோ அதுதான் கல்வி” என்று காந்தி குறிப்பிட்டார். இவ்வுயரிய நோக்கங்களை அடைவதில் ஆசிரியர்களின் பங்கே முதன்மையானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உன்ன யாரும்மா இப்படி பண்ண சொன்னது..? சிரிக்காம பாருங்க !!(வீடியோ)
Next post நடிகைக்கு திருமணம் – சுவிட்சர்லாந்தில் நிச்சயதார்த்தம்! (சினிமா செய்தி)