100 பேரை பிணை கைதிகளாக பிடித்து சென்ற தலிபான்கள்: ஆப்கனில் அட்டூழியம்!!(உலக செய்தி)
ஆப்கானிஸ்தானில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 100 பேரை பிணைக் கைதிகளாக தலிபான்கள் பிடித்து சென்றுள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. நாடு முழுவதும் தீவிரவாதிகள் அவ்வப்போது மிகப்பெரிய குண்டு வெடிப்புக்களை நிகழ்த்தி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, பக்ரீத் பண்டிகையையொட்டி இந்த வாரம் தலிபான்களுடன் நிபந்தனையுடன் கூடிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் சிலரை தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர்.
பதக்ஷன் மற்றும் தக்கார் மாகாணத்தில் இருந்து தலைநகர் காபூல் நோக்கி பொதுமக்கள் சிலர் பேருந்தில் சென்றுக் கொண்டு இருந்தனர். அப்போது குண்டூஸ் மாகாணத்தில் உள்ள, கான் அபாத் மாவட்டத்தில் பயணிகளின் 3 பேருந்துகளை தலிபான்கள் தடுத்து நிறுத்தினர். அதில் இருந்தவர்களை கீழே இறங்கும்படி மிரட்டியுள்ளனர். உயிருக்கு அஞ்சி பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கியுள்ளனர். பெண்கள், சிறுவர்கள் உட்பட சுமார் 100 பேரை பிணைக் கைதிகளாக பிடித்த தலிபான்கள், அவர்களை தங்களுடன் அழைத்து சென்றுள்ளனர். இது தொடர்பாக தீவிரவாத தலைவர் மவுலி ஹைபதுல்லா அகுன்சடா கூறுகையில், “அமெரிக்காவுடனான நேரடி பேச்சுவார்த்தை தான், 17 ஆண்டு கால போரை முடிவுக்கு கொண்டு வரும்” என்றார்.
Average Rating