அசாதாரண அறிகுறிகள்!!(மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 45 Second

மகளிர் மட்டும்

உயிரோடு உயிர் சேர்த்து வளர்த்து, பெற்றெடுக்கும் வலியை மட்டும் அனுபவிப்பதில்லை கர்ப்பிணிகள்.கர்ப்பம் உறுதியான நாள் முதல் பிரசவம் வரை உடலளவில் அவர்கள் சந்திக்கிற திடீர் மாற்றங்களும், இன்னல்களும் சொல்லி மாளாதவை. அவற்றில் எது சாதாரணமானது, எது பிரச்னைக்குரியது என்கிற தெளிவின்றி குழம்புகிறவர்களுக்குத் தெளிவான ஆலோசனைகளைச் சொல்கிறார் மகளிர் நல மருத்துவர் நிவேதிதா.

முதுகுவலி

கர்ப்ப காலத்தின் தொடக்கத்திலிருந்து பிரசவித்த பிறகு சுமார் ஆறு மாதங்கள் அல்லது அதற்குப் பிறகும்கூட முதுகுவலி வரலாம். இதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கர்ப்ப காலத்தின்போது, முதுகுத் தண்டுக்கு ஆதாரமாகவுள்ள தசைநார்கள் மிருதுவாகின்றன. கர்ப்பிணிகளின் உடல் எடை அதிகரிப்பதால் அவர்களது ஈர்ப்பு விசையும் இடம் மாறுகிறது. தவிர நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், நிற்பதும் இந்த நிலையை மோசமாக்குகின்றன. எனவே, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதையும், நிற்பதையும் கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் தவிருங்கள்.

இன்னும் சில தவிர்ப்பு முறைகள் பின்னோக்கி சாய்ந்து நிற்பது வசதியாக இருந்தாலும் அப்படி நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி
நிற்பதே சரியான நிலை. முதுகுக்கு ஆதாரம் கொடுத்து உட்காருங்கள். தரையிலிருந்து பொருட்களைத் தூக்கும்போது அல்லது எடுக்கும்போது, முன்பக்கம் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள். முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி பிறகு அந்தப் பொருளைத் தூக்க வேண்டும்.
எடை அதிகமான பொருட்களை உங்கள் உடலுக்கு அருகில் இருக்குமாறு பிடித்துத்தூக்குங்கள்.

முடிந்தவரை கூன் போடுவதுபோல வளைவதைத் தவிருங்கள். முதுகுவலியைப் போக்குவதற்கு மசாஜ்கூட பயன் தரும். கர்ப்பக் காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு, ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது சிறிது நேரம் நடப்பது போன்றவற்றை ஆறு மாதங்கள் வரை பின்பற்றுங்கள். முதுகுவலி தொடர்ந்தால், மருத்துவ ஆலோசனை பெறுங்கள். பிசியோதெரபியும் சில வகையான உடற்பயிற்சிகளும் உங்களுக்கு உதவலாம்.

மூச்சுப் பிரச்னை

கர்ப்ப காலத்தில் அடிக்கடி மூச்சு நின்று போவதுபோல தோன்றுவது இயல்பு. கருப்பையிலுள்ள குழந்தை கார்பன் டை ஆக்ஸைடை உருவாக்கி, பனிக்குடம் வழியாக அதை ரத்த ஓட்டத்துக்குள் கடத்துகிறது. அவற்றை வெளியேற்றுவதற்காக உங்கள் உடல் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும், கர்ப்ப காலத்தின் கடைசி நாட்களில், கருப்பையானது மார்புக்கும் வயிற்றுப் பகுதிக்கும் நடுவிலுள்ளதும், நுரையீரல் சுருங்கி விரியக் காரணமானதுமான பகுதியை மேல் நோக்கித் தள்ளுவதால், நுரையீரல் விரிவடைவதற்குப் போதுமான இடமில்லாமல் போய்விடும். இதனால் குறிப்பிட்ட அளவு காற்றை சுவாசிக்க இயலாத நிலை ஏற்படுவதாலும் சுவாசத் தடை ஏற்படுகிறது.

இருமல், மார்பு வலி அல்லது தொடர்ச்சியான களைப்புக்கு அடுத்து சுவாசத்தடை ஏற்படுமானால் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். ஆஸ்துமா இருந்தால், அது நன்றாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கர்ப்ப காலம் முழுவதும் மிகவும் பாதுகாப்பாக இன்ஹேலர்களைப் பயன்படுத்தலாம். அதேநேரம், மிக மோசமான ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டால், அது குழந்தைக்குத் தேவையான ஆக்சிஜன் அளவை குறைத்து விடுவதோடு, ஆபத்தாகவும் முடியும்.

நெஞ்சு கரித்தல் மற்றும் நெஞ்செரிச்சல்

16-வது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பையின் பெருக்கம் வயிற்றை அழுத்துவதால், இரைப்பையிலுள்ள அமிலம் தொண்டைக்குழாயை நோக்கி வெளியே தள்ளப்படுவதால் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும், மஞ்சள் காமாலை இருக்கிறதா என்பதையும் இந்த நேரத்தில் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.
இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும்.

இதைத் தவிர்க்க பிரச்னைக்கு காரணமான உணவுகளைத் தவிர்த்து விடுவதே சரியானது. அதே நேரம், பிற உணவுகளில் சரிவிகித ஊட்டச்சத்துகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரேயடியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து சாப்பிடுங்கள். சாப்பிடும்போது நிமிர்ந்து உட்காருவது உங்கள் வயிற்றிலுள்ள அழுத்தத்தை அகற்றும்.

இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக்கதிகமாக ஏற்படும் தளர்வினால் கடுமையான, எரிவது போன்ற வலி மார்பில் ஏற்படுகிறது. இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக் குழாய்க்கு வரும் சூழ்நிலை ஏற்படுகிறது. 50 சதவிதத்துக்கும் அதிகமான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். வளரும் குழந்தை இரைப்பையை முன்னோக்கித் தள்ளுவது ஒரு காரணம்.

அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்து படுப்பதாலேயே அவ்வப்போது நெஞ்செரிச்சல் வருகிறது. எனவே, ஒரேயடியாக சாப்பிடாமல் சின்னச்சின்ன இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிட்டு, பிரச்னை வராமல் தவிர்க்கலாம். இரவில் நெஞ்செரிச்சல் வந்து சிலருக்கு விழிப்பு வரும். அப்படி வருபவர்கள் தங்கள் பக்கத்தில் தயாராக ஒரு டம்ளர் பாலை வைத்துக் கொள்வது நல்லது. நெஞ்செரிச்சலுக்குத் தொடர்ச்சி யாக பயன்படுத்தும் மாத்திரைகளைத் தவிர்த்துவிட வேண்டும். இவையெல்லாம் பாதுகாப்பற்றவை.

சாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இதனால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் சிரமமின்றி செல்லும். தலைப்பகுதி உயரமாக உள்ள படுக்கையில் படுத்தால் நல்ல உறக்கம் வரும்.

தலைவலி

கர்ப்ப காலத்தில் இது சகஜம்தான். வெப்பமான, காற்றோட்டம் இல்லாத சுற்றுச் சூழல்களைத் தவிர்க்க வேண்டும். உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு அவசியம். அதிகளவில் திரவ உணவுகளை அருந்த வேண்டும். தலைவலி தொடர்ந்து நீடித்தால் மருத்துவர் ஆலோசனையுடன் சாதாரண பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாம்.

ஆனால் ஆஸ்பிரினை சாப்பிடக் கூடாது. பாராசிட்டமால் பாதுகாப்பானது என்பதோடு குழந்தைக்கும் எந்தக் கெடுதலையும் உண்டாக்காது. தலைவலியானது அடிக்கடி வந்தாலோ, தீவிரமானாலோ மருத்துவரைப் பார்க்கவும். கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில் தலைவலி ஏற்படுவது மிகை ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவோ அல்லது வேறு பிற சிக்கலாகவோ இருக்கக் கூடும். அலட்சியம் வேண்டாம்.

ஈறுகளில் ரத்தக் கசிவு

கர்ப்ப காலத்தில் ஈறுகள் மென்மையாக மாறும். கடினமான உணவுப் பொருட்களைக் கடிப்பது, பற்களை அழுத்தித் தேய்ப்பது போன்ற இரண்டுமே பற்களைப் பாதித்து நோய்த்தொற்றையும் உண்டாக்கும். கர்ப்பக் காலத்தில், பற்களைச் சுத்தப்படுத்துவதில் அதிக கவனம் வேண்டும். ஒரு நாளைக்கு இருவேளை பல் துலக்குங்கள். மிருதுவான பிரஷ் பயன்படுத்துங்கள்.

அரிப்பு

கருப்பையிலுள்ள குழந்தை வளர வளர உங்கள் வயிற்றுப் பகுதியிலுள்ள சருமம் இறுகத் தொடங்குகிறது. இதனால் கோடுகள் தோன்றி அப்பகுதியில் அரிப்பு இருக்கும். உடல் முழுவதும் அரிப்பு அதிகமாக இருந்தால் மருத்துவப் பரிசோதனை அவசியம். மென்மையான, தளர்த்தியான ஆடைகளை அணிவது பலன்தரும்.

இருவேளை குளிக்கலாம். அரிப்புள்ள இடத்தில் லோஷன் அல்லது டால்கம் பவுடர் தடவுவது இதமாக இருக்கும்.வெள்ளைப்படுதல் கர்ப்ப காலத்தில் எல்லா பெண்களுக்கும் அதிகளவில் வெள்ளைப்படும். இதனால் புண்ணோ, நமைச்சலோ ஏற்டாதவரை பயப்படத் தேவையில்லை. புண், எரிச்சல் அல்லது நிறமாற்றம் மற்றும் நாற்றத்துடன் வெள்ளை பட்டால் மட்டும் மருத்துவ ஆலோசனை மேற்கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு!!(மருத்துவம்)
Next post காய்கறி விற்ற நடிகை !!(சினிமா செய்தி)