மண்டேலாவுக்கு ‘மனசாட்சியின் தூதர்’ விருது
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு ஆம்னஸ்டி அமைப்பின் மனசாட்சியின் தூதர் என்ற விருது கிடைத்துள்ளது. சர்வதேச மனித உரிமை கழகமான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் மனித உரிமை தொடர்பாக விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான மனசாட்சியின் தூதர் என்ற விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆம்னெஸ்டி அமைப்பின் நிறுவனர் பில் சிப்சி கூறுகையில், வேறு யாரையும் விட நெல்சன் மண்டேலதான் இந்த விருதுக்கு மிகப் பொருத்தமானவர். பொது வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடனும், கொள்கையுடனும் செயல்பட்டவர் அவர் மட்டுமே. சுதந்திரம், நீதி, நியாயம் ஆகியவற்றுக்காக மிகக் கடுமையாக போராடியவர் மண்டேலா. அதை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுதவிர ஆப்பிரிக்காவிலும், உலகின் பிற பகுதிகளிலும் எச்.ஐ.வி, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோருக்காக குரல் கொடுத்தவர், பாடுபட்டவர். அவர்களது மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என போராடியவர் என்று கூறியுள்ளார்.
ஆம்னெஸ்டி அமைப்பின் பொதுச் செயலாளர் ஐரீன் கான் கூறுகையில், இந்த விருதை பெற மண்டேலா சம்மதித்திருப்பதன் மூலம் இந்த விருதுக்கே பெருமை கிடைத்துள்ளது என்றார்.
தென்னாப்பிரிக்காவில் இனவெறியை எதிர்த்தும், வெள்ளையர் ஆட்சியை எதிர்த்தும் போராடி கிட்டத்தட்ட 28 ஆண்டுகள சிறையில் வாடியவர் மண்டேலா. அந்நாட்டின் முதல் கருப்பின அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நவம்பர் 1ம் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆம்னெஸ்டி விருது மண்டேலாவுக்கு வழங்கப்படவுள்ளது.
அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் எய்ட்ஸ் விழிப்புர்ணவு, ஒழிப்பு போராட்டங்களில் பங்கெடுத்து வருகிறார் மண்டேலா.