ஹீரோயின் இயக்குவதால் வில்லன் நடிகர் விலகல்!!(சினிமா செய்தி)
இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர் ஜான்சி ராணி. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக எண்ணியிருந்தவர் கங்கனா ரனாவத். மணிகர்ணிகா பெயரில் இந்தியில் உருவாகும் ஜான்சி ராணி கதையில் நடிக்க வாய்ப்பு வந்தபோது கங்கனா உடனே ஏற்றுக்கொண்டார். அதற்காக குதிரை ஏற்றம், கத்தி சண்டை பயிற்சிகள் பெற்றார். இப்படத்தை இயக்குனர் கிரிஷ் இயக்கி வந்தார். இவர் தமிழில் வானம் படத்தை இயக்கியவர். மணிகர்ணிகா படத்தை இயக்கி வந்த கிரிஷ் திடீரென்று தெலுங்கில் உருவாகும் என்.டி.ராமராவ் வாழ்க்கை படத்தை இயக்க ஒப்புக்கொண்டார்.
வேகமாக மணிகர்ணிகா படத்தின் பணிகளை முடித்துவிட்டு என்.டி.ஆர் வாழ்க்கை படத்தை இயக்க கிரிஷ் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தை திரையிட்டு பார்த்த தயாரிப்பாளர் மற்றும் கங்கனா ரனாவத்துக்கு சில முக்கிய காட்சிகள் பிடிக்கவில்லை. அக்காட்சிகளை ரீஷூட் செய்து தரும்படி இயக்குனரிடம் கேட்டனர். அதை கிரிஷ் ஏற்கவில்லை. என்.டி.ராமராவ் படத்தை திட்டமிட்டபடி முடித்து தர வேண்டும் என்று ஏற்கனவே என்.டி.பால கிருஷ்ணா கூறியிருந்ததால் அப்படத்தை இயக்கும் பணிகளில் பிஸியாகிவிட்டார் கிரிஷ்.
இதையடுத்து மணிகர்ணிகா படத்தின் முக்கிய காட்சிகளை இயக்குனர் பொறுப்பு ஏற்று ரீ ஷூட் செய்ய முடிவு செய்தார் கங்கனா. ஆனால் இதை இப்படத்தில் நடித்து வந்த வில்லன் நடிகர் சோனு சூட் ஏற்க மறுத்துவிட்டார். இயக்குனர் மாற்றத்தை காரணம் காட்டி அப்படத்திலிருந்து அவர் விலகி இருக்கிறார். இதனால் மணிகர்ணிகா படம் திட்டமிட்டபடி உருவாகுமா? அல்லது டிராப் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Average Rating